Saturday 24 December 2016

OZ தமிழ் மூலவளங்கள் பற்றி ஒரு குறிப்பு....

2017ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இன்று 24.12.2016ம் திகதி.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச தனியார் நிறுவனங்கள் எல்லாம் நேற்றையோடு விடுமுறை விட்டாயிற்று.

இதமான காலநிலையோடு நாடு வண்ண வண்ண விளக்குகளால் வண்ண மயமாய் காட்சி அளிக்கிறது. மனிதர்களின் முகங்களில் எல்லாம் இறுக்கம் நீங்கி புன்னகை பொலிந்திருக்கிறது. பாதசாரிகள் வாழ்த்துக்களைச் சொரிந்த படி நகர்கிறார்கள்.

குழந்தைகள் நாளை நத்தார் பாப்பாவை வரவேற்கத் தயாராகிறார்கள்....

மக்கள் சாரை சாரையாக தத்தம் வாகனங்களில் வெளியூர்களுக்குப் பயணமாகிறார்கள்....

இனி அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக வேறொரு உலகத்தில் போயிருந்து தம்மை முற்றிலுமாகப் புதுப்பித்துக் கொண்டு புது வருடத்தை வரவேற்கத் தயாராவார்கள்.

பழையன கழிகின்றன... புதியன புகுகின்றன...

என்னைக் கடந்து போன வருடம் செல்லப் பிராணியை வருடிக்கொடுக்கும் எஜமானனின் கைகளைப் போல என்னை வாஞ்சையோடு வருடி வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுத் தந்து போனது. இது வரை வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில் மிகுந்த திருப்தியை மனநிறைவை அது தந்திருக்கிறது.

2016க்கு நன்றி.

ஆனால், சமூக வாழ்வில் என் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறேனா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன். தமிழரின் பாரம்பரிய ; மறைந்து போன; தகவல் தொழில் நுட்பத்தின் வரவுக்கு முன்பான வாழ்வியலை ஆவணப்படுத்த வேண்டும் என்ற திட்டம் 4,5 பதிவுகளோடு நின்று விட்டது.

உயர்திணையின் இலக்கிய சந்திப்புகள் கிரமமாக மாதாந்தம் நடைபெற வில்லை.

ஆனாலும் நற்கீரன் என்ற ஒரு நண்பர் மூலமாகவும் அருண்.மகிழ்நன் என்ற இன்னொரு நண்பர் மூலமாகவும் அவர்கள் தமிழுக்குச் செய்யும் அளப்பெரிய தொண்டுகள் பற்றிய தகவல்களும் விபரங்களும் கிடைக்க எனக்கும் அந்த நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது.

அந் அந் நாடுகளில் இது வரை வெளிவந்துள்ள தமிழோடு இணைந்த மூல வளங்களைச் சேகரித்தலே அந்தப் பணி. அவர்களோடு இணைந்தும் அதே நேரம் இங்கும் அவற்றை பதிவேற்றுதலுக்காக இன்று இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்.

உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரும் அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்; அங்கு என்னென்ன தனித்துவங்கள் இருக்கின்றன என்று தேட நேர்ந்தால் அவர்களுக்கு இப்பக்கம் தகவல்களைத் தர வேண்டும் என்பது தான் இப்பக்க நோக்கம்....

என்னென்ன விடயங்களைப் பதிவேற்றலாம் என்பது பற்றிய குறிப்பை ஒரு எதிர்கால பார்வைக்காகத் தனியான பதிவாக பதிவேற்றுகிறேன். அது போகிற பாதைக்கு வெளிச்சம் தரும் ஒரு இலக்கொளி எனவும் இப்போதைக்குக் கொள்ளலாம். எனினும் அது பூரணமானதல்ல. விலகிச் செல்லாதிருக்க ஓர் உத்தேச எல்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இங்கிருக்கிற நாட்டின் தனித்துவங்களையும் தமிழின் தனித்துவங்களையும் அதன் மூலங்களையும்  அடையாளம் காட்ட புகைப்படக் கருவியை பெரிதும் நம்பி இந்தப் பக்கம் ஆரம்பிக்கப் படுகிறது.

வெற்றியையும் தோல்வியையும் காலத்தில் கைகளில் இப்போதைக்கு விட்டு விடுகிறேன்.

நாளை மறு நாள் நாமும் வெளியூர் பயணம். நாட்டழகைக் காணும் ஒரு குடும்பப் பயணம்.

சந்திப்போம்...

புது வருடம் எல்லோருக்கும் சுபீட்சமும் மன அமைதியும் சந்தோஷமும் நின்மதியும் கொண்டு வரும் ஆண்டாக மிளிர்வதாக....

No comments:

Post a Comment