Wednesday 22 November 2017

தையல் கலை (embroidery) - 3 -

இலங்கைத் தமிழர்களுடய வீடுகளில் மரத்தினாலான தளபாடங்களும் பிரம்பினால் அமைந்த பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய கதிரைகளும் வரவேற்பறையில் அமைந்திருக்கும்.

அவைகள் பருத்தித் துணிகளினால் ஆன உறைகளில் கைத் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய அழகியல் அம்சங்களைத் தாங்கி இருக்கும்.

படுக்கை அறைத் தலையணை உறைகளும் இலவம்பஞ்சினை உள்ளடக்கிய வாறும் பருத்தித் துணியினாலான உறைகளை கொண்ட படியும் அதன் மேலே கைகளினால் போடப்படும் பலவிதமான அழகியல் வேலைப்பாடுகள் அமைந்த தையல் அலங்கார வேலைப்பாடுகளாலும் மெருகு பெற்றிருக்கும்.

பெண்கள் குறிப்பாக கன்னிப் பெண்கள் தையல் பழகும் நிலையங்களுக்குச் சென்று தையல் பழகி இருத்தல் ஒரு சிறந்த திறமை என கொண்டாடப்பட்டிருந்தது.

தையல் ஊசி கொண்டு வண்ண வண்ண நூல்களினால் செய்யப்படும் அலங்காரங்கள் வரவேற்பறையை அலங்கரிக்க உதவியது மாத்திரமன்றி சம்பந்தப்பட்டவரின் கலை வெளிப்பாட்டை; கற்பனைப் பண்பை; குணஇயல்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும்; சிறந்த கலைகளில் ஒன்றாகவும்; மன மகிழ்வை ஊட்டும் அம்சமாகவும் அனுபவிக்கப் பட்டு வந்தது.

இன்று இயந்திரங்களே சகலவற்றையும் செய்து வரும் இன் நாளில் கைத்தையல் அலங்காரங்கள் மருவி இல்லாது போய் வருகின்றன. அந்த இடங்களை தையல் இயந்திரங்களும் பெயின்ரிங் அலங்காரங்களும் துணியிலேயே அச்சடிக்கப்பட்டவாறு வரும் அலங்காரத் துணி வகைகளும் பிடித்துக் கொண்டு விட்டன. மக்களிடம் நேரமின்மையும் மினைக்கெடும் பொறுமையின்மையும் அதன் உபரிக் காரணங்களாக அமைந்து போயின.

மிக சிறந்த; மன மகிழ்வூட்டக்கூடிய;உபயோக கரமான; தையல் கலையான embroidery கலை தொழில் நுட்பம் அடித்துச் சென்ற பலவற்றுள்ளும் நாம் இழந்து போன அழகியல் கலை எனில் மிகையில்லை.

கூடவே பின்னல் வேலைப்பாடுகள் கொண்டமைந்த கதிரைகளும் குறைந்து மெத்தைக் கதிரைகள் அந்த இடத்தைப் பிடித்து வருவதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

வடிவங்களினாலும்; வண்ணங்களினாலும்; தையல் வகைகளினாலும்; நூல்களின் தரத்தினாலும்; துணியின் பருமத்தினாலும் முழு உருவம் பெறும் ஒரு சித்திரம் தைப்பவரின் கற்பனைக்கும் அழகியல் உணர்ச்சிக்கும் தெரிவு செய்யும் பொருள் நிறம் போன்ற வகைப்பாட்டுக்கும் ஏற்ப தனித்துவமான இயல்பினைப் பெறும்.

ஒரு ஓவியம் தீட்டுவதைப் போல; நூலினாலும் ஊசியினாலும் வடிவம் பெறும் இக் கலை இன்றய நட்களில் எல்லாம் சீண்டப்படாத / தேடப்படாத ஒரு தேவதையைப் போல ஒதுங்கிப் போய் இருக்கிறது....

அது ஒரு சோகமான நிகழ்வே....

எனக்கும் கூட மிகக் களிப்பூட்டும் மிகப் பிடித்தமான இத் தையல் கலை அண்மையில் ஊருக்குச் சென்றிருந்த சமயம் மீண்டும் புத்துயிர் பெற்று விட்டது.

வவுனியாவில் என் சின்னம்மா வீட்டுக்குச் சென்றிருந்த போது சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த பின்னல் (பிரம்புப் பின்னல்) வேலைப்பாடுகள் கொண்டமைந்த கதிரைகளையும் முதிரை மரத்தில் செய்த ஸ்ரூல்களும் சிறு தேநீர் மேசையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். ஆனால் அதற்குப் போட்டிருந்த கதிரைச் சீலைகளும் மேசை விரிப்புகளும் பெயின்ற் வேலைப்பாடுகளைக் கொண்டமைந்திருந்தது சற்றே உறுத்த, ’ஏன் அன்ரி, இப்ப நீங்கள் தைக்கிறதில்லையோ’ என்று கேட்டேன். ’இப்ப ஆர் பிள்ள தைச்சு மினைக்கெடுறது. அதுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை’ என்றார்.’நான் தைச்சுத் தரட்டோ அன்ரி’ என்று கேட்டேன். மிகச் சந்தோஷமாக துணி வாங்கித் தந்தார்.

ஒரு வெறியைப் போல அது என்னை ஆட்டிப் படைக்க, இப்ப எத்தனையோ வேலைகளைப் பின் போட்டுவிட்டு தைத்துக் கொண்டு இருக்கிறேன்....

அதன் ஆழமான நுட்பங்களை அதன் விளைவாக மிளிரத்தக்க அழகியலை கற்க எனக்கு வாய்ப்பு வரவில்லை. 6,7,8ம் வகுப்புகளில் கறற அடிப்படைக் கைததையல்களினால் நான் செய்து கொண்டிருக்கும் சிறு பிள்ளை வேளாண்மை இது....

சும்மா ஒரு ஆசையில்...உங்கள் பார்வைக்கும் அவை...

தையல் ஊசிகள்; பல திணுசுகளில்

தையல் ஊசியில் நூல் கோர்க்கும் உத்திக்கான நுட்பம்
அழகிய நூல் வெட்டும் கத்திரிக் கோல்

பலவண்ண நூல்கள் பட்டிலும் பருத்தியிலுமாக...

களி நூல்கள் பல திணுசுகளில்... பட்டிலும் அவை உண்டு.








கமறா பிடித்து வைத்த ஒரே நேரம் இரு வேறு வண்ணம். 









பூக்களின் நடுவே வெற்றிடம் காண்க...

வெற்றிடம் மஞ்சளால் நிரம்பியுள்ளது இங்கே...


இது ஒரு வித மினுங்கும் பெல்ஜிய நாட்டு நூல் வகையால் தைத்தது...நேரிலே அதன் தோற்றப்பாடு வேறு விதம். கமறாவால் அதனைக் கைப்பற்ற முடியவில்லை...

பூரணமாகுமுன்...

பூரணமான பின்...



பிற் குறிப்பு: குகுள் இமேஜ் இனுள் தைக்கத் தக்க வடிவங்களும் புற உருவங்களும் ஏற்கனவே சர்வதேச நாடுகளில் இருந்து தைத்தவர்களின் கைவண்ணங்களுமாக அவை ஒரு தனி உலகமாக விரிகின்றன....





அழகிய இந்த நுட்பமானதும் அழகியதும் மன மகிழ்ச்சியைத் தர வல்லதுமான  embroidery கலை மன உழைச்சல்கள் நிறைந்த வாழ்க்கையில் இருந்து சில மணித்துளிகள் தப்பி தம்மைப் புத்துணர்ச்சியூட்டி மீள நல்ல மருந்துமாகும். 

தையல் இயந்திரம் - 2 -

நம் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த பிள்ளைகளாகிய உங்களுக்கு தையல் இயந்திரம், தையல்கலைகள், அதற்கான உபகரணங்கள், வகைப்பாடுகள் குறித்து அதிகம் பரீட்சயம் இருக்காது என்று எனக்கொரு எண்ணம்.

சில பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கவும் கூடும்...

அது ஓர் அழகிய மனதுக்கு இதம் தர வல்ல, மகிழ்வூட்டக் கூடிய ஒரு கலை.

இன்றய நேர அவகாசமின்மை, மிக விரைவான வாழ்க்கை ஓட்டம், இராட்சத இயந்திரங்கள் அந்த வேலைகளை சொற்ப நேரத்தில் செய்து முடிவுப்பொருளாக்கி விடும் காரணங்கள், பிரபலமாகிப் போய் விட்ட ready made ஆடைகள் உலகம்  போன்ற இன்ன பிற அந்த அழகியல் சார்ந்த கற்பனைக்கும் அழகியலுக்கும் ஒருவரது குண இயல்பைப் பிரதி பலிக்க வல்ல பாங்குக்கும் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும்.

சுமார் 70, 80 வருடங்களின் முன்னால் கைகளினால் இயக்கும் தையல் இயந்திரங்கள் இலங்கையில் பிரபலமாக இருந்தன. காலப்போக்கில் அவை கால்களினால் இயக்கப் படும் இயந்திரங்களாக இலகுவாக்கப் பட்டன. singer என அழைக்கப்படும் தையல் இயந்திரங்கள் அந் நாட்களில் மிகப் பிரபலமாக அநேகமாக எல்லார் வீட்டிலும் ஓர் அத்தியாவசியப் பொருள் போல விளங்கின. தற்போது மின்சாரத்தினால் இயக்கப் படும் தையல் இயந்திரங்கள் பாவனைக்கு வந்துள்ளன.

வர்த்தக வாணிப நிலையங்களில் ஆடைகளை விலைக்கு வாங்க பண பலம் இடம் தராதவர்கள் துணிகளைக் கடைகளில் வாங்கி தம் வீட்டிலோ, தெரிந்தவர் வீடுகளிலோ கொடுத்து சட்டைகளையும் பாவாடைகளையும் என தமக்கான ஆடைகளை தைத்துக் கொண்டார்கள்.

பண்டிகைகள், மற்றும் கலாசார கொண்டாட்ட காலங்களின் போது இவ்வாறு தைக்கப் படும் ஆடைகளுக்கும் அவற்றைத் தைத்துக் கொடுப்பவர்களுக்கும் முதல் நாள் இரவு உறங்காத இரவாகவே இருக்கும். மாணவக் காலங்களில் சீருடைகளும் இவ்வாறு வீடுகளில் தைக்கப்பட்டவை தான்.




 ( புகைப்படங்கள் கொழும்பில் உள்ள சினேகிதி ஒருவரின் வீட்டில் 5.10. 17 அன்று எடுத்தது. இந்தத் தையல் இயந்திரம் சற்றுப் பிற்பட்ட காலத்தது. அழகியல் வேலைப்பாடுகள் செய்யத்தக்க தையல் இயந்திரம். புகைப்படம் யசோதா.பத்மநாதன் )

கைத்தொழில் வாணிபமாகவும் அது பிரபலம் பெற்று விளங்கியது. தையல் காரர்கள் ஆண்களின் ஆடைகளையும் பெண்களின் சேலைகளுக்கான ரவிக்கைகளையும் பிள்ளைகளின் பிறந்த நாள் ஆடைகளையும் தைத்தார்கள். இன்றும் ஆங்காங்கே இத்தகைய தையல் காரர்கள் பிரபலமாக விளங்குகிறார்கள். இந்தியாவில் இன்னும் பிரபலமாக அவர்கள் விளங்குகிறார்கள்.

தலையணை உறைகள், மேசைச் சீலைகள், கதிரைச் சீலைகள் போன்றன இன்னொரு வகையான தையல் கலை சார்ந்து இன்னொரு வித அழகியலைப் பறைசாற்றும் அம்சமாக விளங்கின. ( இதனை அடுத்து அந்தப் பதிவு இடம் பெறும்)

இத்தகைய இயந்திரங்களால் துணிகளினால் ஆன ஆடைகள் வடிவமைக்கப் பட்டன. பிற்காலங்களில் துணிகளில் வண்ண நூல்களினால் அழகுக்காக பல வேலைப்பாடுகளைச் செய்யவல்ல இயந்திரங்கள் உருவாக்கப் பட்டன. வேறு வேறு நாடுகள் வேறு வேறான முறை வகைகளிலும் தையல் இயந்திரங்களை உருவாக்கின.

புலம் பெயர்ந்த பின் பிறந்த பிள்ளைகளுக்கு இத்தகைய தையல் இயந்திரங்கள் புதுசு தானே....

அவுஸ்திரேலியாவில் Parramatta நகரில் அமைந்திருக்கிற Brislington Madical And Nursing Museum இல் அவுஸ்திரேலிய குடியேற்ற காலத்தில் பாவ்விக்கப் பட்ட அமெரிக்கப் பாணியிலான காலினால் இயக்கப் படும் தையல் இயந்திரம் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கிறது.






....இப்புகைப்படம் 17.6.17 அன்று எடுக்கப்பட்டது.


OZ தமிழ் பிள்ளைச் செல்வங்களுக்காக...

நோக்கமும் அறிமுகமும்

இங்கு மாத்திரமல்ல; சர்வதேசமெங்கும் தமிழ் பிள்ளைகள் அந் அந் நாட்டு மொழிகளையும் கலாசாரங்களையும் பேணிய படிக்கும் தாம் பிறந்த தாய் நாட்டின் பிரஜைகளாகவும் வாழ்ந்த படிக்கு தம் மூதாதையரின் ஏதோ ஒரு வேரின் அம்சமொன்றைத் தாங்கிய படிக்கும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகளின் பெற்றோரின் வயதெல்லைகளுக்குள் இருக்கிற மத்திய வயதைத் தாண்டியவர்கள்; புலம்பெயர்ந்து 25, 30 வருடங்களை புலங்களில் கழித்தவர்கள் கூட மீண்டும் தாயகம் போகும் போது பல விடயங்கள் புதிதாகவும் புலங்களில் காண முடியாத அதே நேரம்  நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிற அம்சங்களைக் கொண்டனவாகவும்  மேலும் சில காலங்களால் அழிந்து போய் விட்ட;  மாற்றங்களால் உள்வாங்கப்பட்டனவாகவும் போய் விட்டன.

அவைகள் வாழ்வியல் கோலங்களாக ஒரு காலத்தில்  இருந்து பின் மருவியவை.அன்றேல் மாற்றங்களுக்கு உள்ளானவை; அல்லது இல்லாதொழிந்து போனவை.

நம் எதிர்கால சந்ததியினருக்கு; நம் பிள்ளைகளுக்கு இத்தகைய பொருள்கள் ஊடாக ஒரு பண்பாட்டை அடையாளம் காட்ட முற்படும் முயற்சி இது.

சென்ற மாதம் தாயகம் போய் வந்த போது எடுத்து வந்த ஒரு சில டிஜிட்டல் புகைப்படங்கள் நம் பிள்ளைகளுக்கு நம் தாயகத்தின் ஒரு கால கட்ட வாழ்க்கையை; தம் மூதாதையரின் வாழ்வியலை; பேசும் மொழியின்றி; வாசிக்க வேண்டிய கட்டாயமின்றிப்; புரிய வைக்கும் என்ற நம்பிக்கையோடு அவைகளை இங்கு நம் எதிர்கால சந்ததிக்காகப் பதிவேற்றுகிறேன்.
............................................
13.12.2017
பின் இணைப்பு;

மேலும் பல புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன.மெல்போர்னில் இருந்து வெளியான
1.சிசு நாகேந்திரா அவர்களின் ‘அந்தக் காலத்து யாழ்ப்பாணம்’
2. பேரா. சிவலிங்கராஜா அவர்களால் வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணப் பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும்’
3. பேரா. புஷ்பரட்னம் அவர்களால் பதிப்பிக்கப் பட்ட ‘யாழ்ப்பாண வாழ்வியல்’
4.Prof. Pushparadnam 'Tourism and Monuments'
5. மற்றும் சுவிஸ் நாட்டில் வெளியிடப்பட்ட முழுக்க முழுக்க புகைப்படங்களின் தொகுப்பாக அமைந்துள்ள ‘ஈழத்தமிழர் மரபுரிமைச் சின்னங்கள்’

ஆகியனவும் பார்க்கத் தக்கன. மேலும் சில இணையத் தளங்களும் இது குறித்த பல தகவல்களையும் புகைப்படங்களையும்  கொண்டமைந்தனவாக உள்ளன.

www.akshayapaathram.blogspot.com  என்ற என் மற்றய பதிவேட்டில் ‘கண்டறியாத கதைகள்’ என்ற தலைப்பில் கடந்த சில வருடங்களாக சில விடயங்களைப் பதிவேற்றியிருந்தேன். அவை நம்முடய காலத்தில் காலாவதியாகிப்போனவை என்ற ரீதியில் பார்க்கப் பட்டவை.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின் கண்ட, கேட்ட பல விடயங்கள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்ற போதிலும்; வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளுக்கு அவை புதிதானதாக; புதினமானவையாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிந்தது. அதனால் அந்த ஒரு வாழ்க்கை முறையை நம் பிள்ளைகளுக்கு முடிந்த வரை காட்சிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இருந்த போதும் இவைகள் முழுமையானவையாக இல்லை என்ற குறைபாடு நிச்சயமாக உண்டு. சந்தர்ப்பங்கள் வருகின்ற போது அவைகள் மேலும் மேலும் மெருகேற்றப்படும்.

ஒரு போதும் எதுவும் பூரணமாக ஒரே தடவையில்  அமைந்து விடுவதில்லை. பதிவேற்றப் புகுகின்ற பொழுதுகளில் அத்தகைய குறைபாடுகள் வெகு தூக்கலாகப் புலப்படுகின்றன.......




சாக்குக் கட்டில் - 1 -









இன்றய காலங்களில் இல்லாது ஒழிந்து போய் விட்டவற்றுள் ஒன்று இந்தச் சாக்குக் கட்டில். இதனைச் சாக்குக் கட்டில் என்றதற்கு காரணம் இந்த கட்டில் ஆரம்ப காலங்களில் சணல் என்ற பயிரில் இருந்து திரிக்கப் படும் நூலான சாக்கு என்ற பலமான ஆனால் மெல்லிய கயிறினால் பின்னப்படும் (பொருட்களைக் கட்டி வைக்கவும் ஏற்றிச் செல்லவும் பயன் படும் பெரிய பைகள் இவற்றினால் செய்யப்படுபவை.) நீளத் துணியினால் இவ் வகைக் கட்டில்கள் செய்யப்பட்டன. 

சணல் கயிற்றினால் பின்னப்படும் அத்தகைய நீளப்பின்னல் வகையான துணிகள் ஒரு ஆளைத் தாங்க வல்ல பலமும் காற்றோட்டத்துக் கேற்ற இடையிடையே துவாரங்களும் கொண்டது. சுவாத்தியத்துக் கேற்ரது.

அநேகமாக இவ்வகைக் கட்டில்கள் விவசாயப் பின்னணிகளைக் கொண்டமைந்த வீடுகளில் பிரபலமாகக் காணப்பட்டன. அதற்குக் காரணம் தோட்டங்களுக்குக் இரவுக் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் ஒரு மரத்தின் கீழோ அல்லது தற்காலிகமாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிசையினுள்ளோ எடுத்துச் செல்லவும் வைக்கத் தக்கதுமாக இருக்கும் அதன் இயல்பான அம்சம் விவசாயிகளுக்கு மிகுந்த பயனுடயதாக இருந்தது. இலகுவான பாரமற்ற தன்மை, இடத்தை பிடிக்காது ஓரமாக வைக்கத் தக்க அதன் பருமன், இலகுவாக எடுத்துச் செல்ல ஏதுவான அதன் இயல்பு என்பன மறு நாள் தம் வீடு நோக்கி கொண்டு வரும் வசதியை அவர்களுக்கு வழங்கியது.

தொழில் செய்து விட்டு வந்து வியர்வையோடும் களைப்போடும் படுக்க வரும் உழைப்பாளிகளுக்கு சணல் கயிற்றினால் பின்னப்பட்ட இவ்வகைக் கட்டில்கள் காற்றினை உட்செல்லவும் வெளிச்செல்லவும் வசதி படைத்திருந்ததால் மிகுந்த பயனுடயதாக இருந்தன. 

படம்: நன்றி; கூகுள் இமேக்

சாதாரண வீடுகளில் மாமர, வேப்ப மர நிழல்களிலும் இவ்வகைக் கட்டில்கள் இருந்ததுண்டு.

காலப்போக்கில் நாகரிக வளர்ச்சி சாக்கினை அழகில்லை என்றும்; நாகரிகம் இல்லை என்றும்; மலினமானது என்றும்; ஒதுக்கி விட, அந்த இடத்தை கன்வஸ் துணிகள் பெற்றன.

பெயர் மட்டும் அப்படியே நிலைத்திருக்க துணி மட்டும் மாறிய வரலாறு இவ்வாறு தான். மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது கன்வஸ் துணியினால் ஆன சாக்குக் கட்டிலே! 

காலப் போக்கில் இந்தச் சாக்குக் கட்டிலே இல்லாது போய் விட்டது. அந்த இடத்தை நிரப்ப வேறு மாற்று எதுவும் இல்லாது போய் விட்டது என்ற போதும் ‘சோம்பேறிக் கட்டில்’ என அழைக்கப்படும் Lazy chair / Easy chair பிடித்திருக்கிறது என்று ஒருவாறு சொல்லலாம். இந்த வகைக் கட்டில்கள் உலகெங்கும் ஓர்  அளவு பிரபலமானவை.

படம்; நன்றி; கூகுள் இமேக்

ஆனால் இந்தச் சாக்குக் கட்டில்கள் இலங்கையில் சிங்களத் தமிழ் சமூகங்களிடையே மிகப் பிரபலமாக புளக்கத்தில் இருந்து மறைந்து போயின.

இந்தப் புகைப்படம் கொழும்பில் உள்ள ஒரு தொடர்மாடிக்கட்டிடத்தின் கீழே அக் கட்டிடக் காவலாளி பாவிப்பதற்காக ஒரு ஒதுக்குப் புறத்தில் காணப்பட்டது. 

கண்டது 2.10.17. புகைப்படம் எடுத்தது 26.10.17. இடம் கொழும்பு, வெள்ளவத்தை.
புகைப்படம்; யசோதா.பத்மநாதன்.