Saturday 30 December 2017

அட்சரக் கூடு - 19 -

சிறு குழந்தைகளுக்குக் காவலுக்காக மந்திரிக்கப்பட்ட இயந்திரத் தகடு செய்து அதனை சுருட்டி ஒரு தங்க குளாயினுள் சொருகி சங்கிலியிலோ அல்லது அரைஞாண் கயிற்றிலோ கோர்த்து அணியும் / அணிவிக்கும் பொருளை அட்சரக் கூடு என்பர்.

இயந்திரத்தகடு என்பது தீய சக்திகளை விரட்டி நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கையோடு மந்திரங்கள் முதலானவற்றை எழுதி உச்சாடனம் செய்து மந்திரிக்கப்பட்ட செப்புத்தகடு யந்திரம் ஆகும்.

இயந்திரம் என்பது வழிபடும் சக்கரம் எனவும் அதில் இறைவனின் ஆற்றல் குவித்து வைக்கப்படுகின்றது என்றும் நம்பப் படுகிறது. மந்திரம் என்பது உயிராற்றலையும்:  இயந்திரம் என்பது உயிரைத் தாங்கி நிற்கும் உடல் எனவும் கொண்டு மந்திரத்தின் வாயிலாக இயந்திரத்தில் உயிர் சக்தியை உருவாக்கி அத் தகட்டுக்கு சக்தி ஊட்டப்படுகிறது என நம்பப் படுகிறது.

அவை பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகத் தகட்டில் உருவாக்கப்படுகின்றன.மந்திரித்து சக்தி ஏற்றப்பட்ட இத் தகடுகளை நுண்ணியதாகச் சுருட்டி  ஒரு குளாய்க்குள் அடைத்து அதனை இன்னொரு குளாய் கொண்டு மூடி அதனை ஒரு நூலிலோ அல்லது சங்கிலியிலோ இணைத்து கட்டிக் கொள்வதன் மூலம் தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பினையும் சுக வாழ்வினையும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப் படுகின்றது.

எனினும் இவற்றை அமர கிரியைகள் நடைபெறும் போது, வைத்திய சாலைகளுக்குச் செல்லும் போது, குழந்தை பிறந்து 31 நாட்கள் வரை உள்ள வீடுகளுக்குச் செல்லும் போது, பெண் பருவ கால விலக்கு வந்துள்ள பொழுதுகளில்  என சில குறிப்பிட்ட பொழுதுகளில் இவற்றை அணியக்கூடாதெனவும்: இவ்வாறு அணிந்தால் அதன் சக்தி இல்லாது போய் விடும் என்ற நம்பிக்கையும் இவற்றை அணிபவர்களிடையே உண்டு.

பண்டைக்காலம் தொட்டு இத்தகைய நம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வந்ததைக் காணலாம். இத்தகைய நம்பிக்கைகள் இன்றும் உலக நாடுகளிடையே உள்ள இந்து, பெளத்த, இஸ்லாமிய மதங்களைப் பின் பற்றுவோரிடையே காணப்படுகிறது.

இந்துமத பாரம்பரியத்தில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் கூட இவ்வாறான இயந்திரங்கள் உள்ளன. அத்தகைய உரு ஏற்றப்பட்ட தகட்டினை கீழே வைத்து மூடி அதன் மேல் தெய்வ விக்கிரகங்களை வைத்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்வதை இன்றும் இந்து மத ஆலயங்களில் காணலாம். அதன் மூலம் சிலைக்கு இறை சக்தி ஊட்டப்படுகின்றது என்பது அவர்களின் மரபார்ந்த  நம்பிக்கையாகும்.அதன் ஒரு சிறு கூறாகவே மனிதர்களுக்கு அணிவிக்கும் மரபு இருந்து வந்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் இவ்வாறான இயந்திரங்களை தாளில் எழுதிக் கொடுக்கிறார்கள்.எனினும் இஸ்லாமிய மதம் இவ்வாறான செயல்களைக் “கறாம்” அதாவது இறைவனால் விலக்கப்பட்டது - என அறிவுறுத்துகின்றது. இவற்றைச் செய்பவன் இறைவனால் நிராகரிக்கப்படுவான் என அது அறிவுறுத்துகின்றது.

திபெத், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பெளத்தர்கள் பய உணர்வைக் குறைக்க, அருள் உணர்வைக் கூட்ட, மற்றும் புத்திக் கூர்மை,பொருளாதார மேம்பாடு, அமைதியான வாழ்வு, வசீகரம் முதலான காரியங்களுக்காக மந்திர உச்சாடனங்களைச் செய்து இவ் அட்சரக் கூடுகளைக் கட்டுகின்றனர்.

ஐம்படைத்தாலி என வழங்கிய சங்க காலத்துத் தமிழருடய பண்பாட்டு வழக்கில் பாதுகப்பின் நிமித்தம் எவ்வாறு ஐந்து விதமான ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு இலட்சினையாகப் பூட்டினார்களோ;  பிற்காலத்தில் அதாவது இன்றும் அது எவ்வாறு பஞ்சாயுதம் என்ற பெயரில் பொற் சங்கிலியில் கோர்க்கப்பட்டு குழந்தையின் பாதுகாப்பிற்கான நம்பிக்கையாக இருக்கின்றதோ அதை ஒத்த விதமான ஒன்று தான் இந்த அட்சரக் கூடு என்பதுமாகும்.







இதனை மாலையாகவோ அல்லது இடுப்பில் அரைநாண் கயிற்றிலோ கோர்த்து ஆண்பாலார்க்கு அணியும் வழக்கு இன்றளவும் வடஇந்திய மொழி பேசுவோரிடத்திலும் தமிழோடு இணைந்த தெலுங்கு மலையாள மொழி பேசும் பண்பாட்டுக்குரியோரிடமும் சிங்கள மொழி பேசும் மக்களிடமும் வழக்கில் இருக்கிறது.

இது ஒரு நம்பிக்கை சார்ந்த ஆண்களுக்குரிய அணிகலனாக இருக்கும் அதே வேளை தற்காலங்களில் பெண்களும் இதை அனியும் வழக்கமும் உண்டு.

( பிற்குறிப்பு- 1.1.18.0

புலிப்பல் பதக்கம்கடுக்கண் ஆகியன ஆண்களுக்குரிய அணிகலனாக அமைந்திருந்தமை ஒரு சிறு வரலாற்றுத் தகவலாகும். இது குறித்து ’யாழ்ப்பாணப்பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும்’ என்ற புத்தகத்தில் பேராசிரியர். சிவலிங்கராஜா அவர்கள் வண. முருகப்பா. சதாசிவம் என்பாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்து சில எடுத்துக் காட்டுகளை முன்வைக்கிறார். அதில் ஒன்று வருமாறு,

‘ அவருடய உடை எப்போதும் ஒரே தன்மையதே.கொய்யப்பட்ட ஒற்றைப்பட்டு வேஷ்டியை உடுத்து, தலையிற் ’பழைய காட்’ லேஞ்சி தலைப்பாகையாகக் கட்டி, பொத்தான் வெளியே தோன்றும் மூடுசட்டை போட்டு, சாதாரண செருப்போடு வெள்ளை உறை பரவிய கறுப்புக் குடையுமே இவரது சபை சந்திக்குரிய உடுப்பு. தூதுவளங்காய் பரிமாணமான கடுக்கண் ஒரு சோடி இவர் காதில் மரண பரியந்தம் தொங்கியது.’
( யாழ்ப்பாணப்பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும், குமரன் பதிப்பகம், 2014)

(மறைவாக அரைஞாண் கயிற்றிலோ சங்கிலியிலோ இவ் அட்சரக் கூட்டை கொண்டிருந்ததைப்போல ஆண்கள்  வேட்டி கட்டி, மேலே சால்வை போட்டு, கொண்டை வளர்த்து, குடுமி கட்டி கடுக்கண் போட்ட ஆண்கள் 19ம் நூற்றாண்டின் icon ஆக இருந்தார்கள். பலர் தலைப்பாகை அணிந்ததற்கும் சான்றுகள் உண்டு.)

படப்பிடிப்புக்கு இப் பொருளைத்  தந்துதவியவர் திருமதி சாந்தி. அவருக்கு நன்றி.

படப்பிடிப்பு: யசோதா : 04.11.2012
..............................

( சிறு குறிப்பு:

இப்பதிவு என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 8.11.2012 அன்று எழுதி Draft இல் இருந்தது இன்று இங்கு பிரசுரமாகிறது.) 

Friday 29 December 2017

பொன் நகைகள் - மூக்கணிகள் - 18 -

பெண்ணைத் தாயெனப் போற்றி வந்த தமிழ் மக்களுடய பண்பாட்டு மரபு சார்ந்த வரலாற்றில் பெண்ணின் அலங்கார அணிகலன்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தன.

மிக நுட்பமான அணிகலனில் இருந்து பெரும் அணிகலன் வரை; உச்சம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை பயன்படுத்தப்பட்ட பெண்ணுக்கான அணிகலன்கள் தமிழர் தம் பண்பாட்டையும் அழகுணர்வையும் கலையம்சத்தையும் தனித்துவமாகவும் சிறப்பாக  வெளிப்படுத்தி நிற்பன.

தமிழில் எழுந்த ஐம்பெரும் காப்பியங்களும் பெண்ணின் அணிகலன்களின் பெயரால் அழைக்கப்படுவதில் இருந்து அதன் சிறப்பினையும் தமிழர் மத்தியில் அவை கொண்டிருந்த இடத்தையும் அறியலாம். சிலம்பின் பெயரால் எழுந்த சிலப்பதிகாரத்தில் நாட்டிய மகளாக வந்த மாதவி  பற்றி இளங்கோ பேசுகின்ற போது அவள் அணிந்திருக்கின்ற அணிகலன்கள்  பற்றி மிக நுட்பமாக விபரிப்பது இது பற்றிய ஆர்வமுள்ளவர்களின் கவனத்துக்குரியது. அவை தமிழர் தம் அழகுணர்வினைச் சிறப்பாகச் சுட்டி நிற்பன.

வட இலங்கையில் அணியப்பட்ட நகைகளின் படியல் ஒன்றை பேராசிரியர். கந்தசாமிப்பிள்ளை. கனபதிப்பிள்ளை என்பார் (1903 - 1968 ) தன் காதலியாற்றுப்படை என்ற யாழ்ப்பாணத்தார் வாழ்வியலைப் பதிவு செய்த ஓர் கவிதை இலக்கியத்தில் கீழ் கண்டவாறு தருவதும் கவனத்துக்குரியது.

“ நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
மணவினைக்கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி
பூரான் அட்டியல்,கிச்சிக் கல்லட்டியல்
கடுகுமணிக்கொலுசு, கவுத்தோர் காதுப்பூ
வாளி, சிமிக்கி,வளையல், தோடு
பட்டிணக்காப்பு, பீலிக்காப்புப்
பாத சரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண்,நட்டுவக்காலி
அரும்பு மணிமுரு கொன்றைப்பூவும்
ஒட்டியாணம் மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமுடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது
.........................................”

மனித உடலமைப்பில் மூக்கு ஆகிய அங்கம் வகிக்கும் இடம் தோற்றப்பாட்டளவில் மிகச் சிறிதே ஆகும். எனினும் மூக்கிற்கு தமிழர் அணிகின்ற அணிகள் பல பெயரிட்டு அழைக்கப் படுவன.

 ஒரு கல் வைத்து அல்லது தனித்தங்கத்தால் ஆக்கப் படுபவை மூக்குத்தி என அழைக்கப் பட்டன.

3 -5 - 8 வரையிலான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு அன்னம், கிளி, மயில் போன்ற உருவங்கள் தோன்றும் விதமாக நேர்த்தியாகவும் நுட்பமாகவும் செய்யப்படும் மூக்குத்தி வகைகள் பேசரி என அழைக்கப்பட்டன.

இவை செய் நேர்த்தியிலும் வடிவமைப்பிலும் பொற்கொல்லர்களின் கற்பனை ஆற்றலையும் கலை நுட்பத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கும். பேசரிகளில் செய்யப்படும் உருவங்களுக்கு கண்ணுக்கு இரத்தினநீலக் கற்களும்   மயிலெனில் தோகைக்கு மரகதப் பச்சை நிறக் கற்களும்  அன்னமெனில் வைரக்கற்களும் பதித்து தரமான தங்கத்தில் அவர்கள் ஆக்கும் நுட்ப வேலைப்பாடுகள் வியந்து நோக்கத்தக்கன.

அவை பெண்களின் இடது பக்கம் அல்லது , வலது பக்கத்தை அல்லது இரண்டு பக்கத்தையும் அலங்கரித்து நிற்பன. அவை உட்புறமாகச் சுரை கொண்டு பூட்டும் விதமாக அமைந்திருந்தது.

பாரம்பரியமாகக் அடுத்த சந்ததிக்கு கொடுக்கப்பட்ட அன்ன வடிவிலான பேசரியும் விலாக்கும்:







அது போல மூக்கின் நடுப்புறம் உதட்டுக்குச் சற்று மேற்புறமாக சுரை கொண்டு பூட்டும் விதமாக அல்லது சற்றே அழுத்தி இறுக்கி விடும் விதமாக அமைந்த அணிகலனுக்கு விலாக்கு எனப் பெயர்.

வெளிப்புறமாகப் பார்க்கின்ற போது அவ் அணிகலன் நடு உதட்டின் மேற்புறமாக மூக்குக்கும் உதட்டுக்கும் இடையிலான இடைவெளியை அலங்கரித்து இருக்கும். பலவிதமான இரத்தினக்கற்களின் நிறங்களில் அவை கைதேர்ந்த பொற்கொல்லர்களின் கைகளால் தரமான தங்கத்திலும் தேர்ந்து பொறுக்கி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்களாலும் கவனமாக இணக்கப்  பட்டன.

இற்றைக்குச் சுமார் 50,60 வருடங்களுக்கு முன்பு வரை கூட திருமணத்தின் போது பெண்ணுக்கு அளிக்கப்படும் பெண்ணுக்கான  சீதனத்தோடு ஒட்டியாணம்,காசுமாலை போன்ற பெருத்த நகைகளோடு இவ்வாறான நுட்ப வேலைப்பாடுகள் கொண்ட  சிறிய அனிகலன்களும் இடம் பெற்றிருந்தன. பொன்னோடு பொருள் கொடுத்து  தன் பெண்ணைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மரபு தமிழர் வழக்கு. ஆகையால் அவ்வாறான நகை அணிகள் பரம்பரை பரம்பரையாக அடுத்த சந்ததிக்குக் கையளிக்கப்பட்டன.

அவை சுத்தத் தங்கத்தினாலும் பெறுமதியான கற்கள் பதித்தும் கைகளால் பொற்கொல்லர்கள் மிக ஆறுதலாக  தம் வீடுகளில் இருந்து செய்தும் வழங்கும் மரபு வழக்கில் இருந்தது. வசதி வாய்ப்புகள் குறைவாக அதே நேரம் சிறந்த கலை நுட்பம் வாய்ந்த நம்பிக்கையான பொற் கொல்லர்கள் வீடுகளில் இவ்வாறான பொருட்களைச் அந் நாட்களில் செய்வர். மக்கள் அவர்களின் புகழை ஊரார் மற்றும் உறவினர் மூலம் அறிந்து அவர்களை நாடி வந்து இவ்வாறான பொருட்களுக்கு தம் தேவைக்கான ஆணையை கொடுத்துச் செல்வர். தேவையானவர்களும் அதன் நேர்த்தி, கலையழகு போன்ற காரணங்களால் கலைஞர்களை அவசரப்படுத்தாது பொறுமையாக மாதக்கணக்கில் காத்திருப்பர்.

இன்றும் மூக்குத்தியும் சேலையும்  தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவும் இணைபிரியாக் கூறுகளாகவும் உள்ளன. இவ்வகையான அணிகலன்கள் இன்று பலவித மோஸ்தர்களில் இயந்திர சாதனங்களூடாக பல்வேறு வடிவமைப்புகளில் நவ நாகரிக வடிவங்களில் வெளிப்படுவதோடு மூக்கில் துவாரமிடாமல் அணியத்தக்க விதமாகவும் மூக்கணிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இன்று இந்திய இலங்கைப் பெண்கள் மாத்திரமின்றி ஆண், பெண் என்ற பாகுபாடற்று இவை உலக மக்கள் பலராலும் விரும்பி அணியப்படும் ஓர் அணிகலனாகவும் திகழ்கிறது.

ஆனாலும் கையால் செய்யும் கலை நுட்பத்துக்கு இயந்திர நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யும் நகைகள்  இணையாகா எனச் சொல்வாரும் உளர்.

இத்தகைய அழகு ஆபரணங்கள் காலத்தின் போக்கிற்கேற்ப சில வழக்கொழிந்தும் சில புதிதாய் தோன்றியும் செல்வது வழமை. தற்போது டோலாக்கின் பயன்பாடு அருகி தற்காலங்களில் திருமணத்தின் போது மணமகள் அணியும் அணிகலனாக அருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பாக இந்திய மக்களிடம் தங்க ஆபரணங்கள் தொடர்பான -  நகை தொடர்பான நாட்டமும் அறிவும் அழகுணர்வும் ஆவலும் மேலோங்கி இருப்பதையும்; அங்கு அவை தொடர்பான நகை நிபுணர்கள் மேலோங்கி இருப்பதையும்; சிறப்புப் பயிற்சி பெற்ற நகைக்கலைஞர்களும் அவற்றை விற்கும் ஆபரனக்கடைகளும் தற் காலங்களில் உலக நாடுகளுக்கு குறுகிய காலங்களுக்கு விஜயம் செய்து; பொருட்களை விற்று; தம் வியாபாரத்தைப் பெருக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளில் வசிக்கும் பலர் அங்கு சென்று தமக்கான ஆபரனங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதையும் தற்போதய காலங்களில் காணலாம்.

இலக்கியங்களில் மூக்கணிகள்:

இலக்கியங்களில் விலாக்கு என்ற அணி முல்லாக்கு என்ற பெயரில் அழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கன்னட மொழியில் சாமரசன் என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட  காப்பிய வகையைச் சார்ந்ததும் மொழிபெயர்ப்பு வழி தமிழுக்கு வந்து சேர்ந்ததுமான சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபுலிங்க லீலையில் வருகின்ற ஒரு பெண்ணினுடய அழகு பற்றிய வருணணையின் போது அப்பெண் அணிந்திருக்கின்ற முல்லாக்கு என்ற அணியில் இருக்கின்ற முத்தானது அவள் பற்களின் அழகில் வெட்கித் தலைகுனிந்து அவள் வீட்டு முற்றத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் போல தோற்றமளிக்கிறது என ஒரு பாடல் வருகிறது.

“யூன்னை நிந்தைசெய் வெண்நகை மேற்பழி சார
மன்னி யங்கது நிகரற வாழ் மனை வாய் தன்
முன்னி றந்திடு வேனென ஞான்று கொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி யொத்திநின் றிட்டாள்”

என்பதிலிருந்து இருந்து அக்காலப் பெண்டிர் அவ்வாறான மூக்கிற்கான அணிகளை அணிந்து இருந்தனர் என அறியமுடிகிறது.

மேற்கோள்:

பிரபுலிங்க லீலை

http://www.shaivam.org/tamil/sta_prabhulinga_leelai_1.htm

லலிதசகஸ்ரநாமம் என்ற பக்தி இலக்கியம் நட்சத்திர தோஷத்தை நிவர்த்தி செய்கின்ற சக்தி மூக்குத்திக்கு உண்டெனக் கூறுகின்றது.அதில் வரும் நாசாபரண (நாசி - மூக்கு, ஆபரணம் - அணி, நகை) பாசுரம் அதனை உணர்த்துகின்றது. அதாவது வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின்  அல்லது கிரகத்தில் இருக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியை மழுங்கச் செய்து அவற்றின் மூலம் உண்டாகும் குறை, குற்றங்களை இல்லாமல் செய்யும் அல்லது நீக்கச் செய்யும் ஆற்றல் மூக்குத்திக்கு உண்டென அது கூறுகின்றது.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் வரும் “ மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும் நன்னகர் மூதூர் வீதி” என்ற அடி மூக்கில் முத்தணியை அணிந்திருப்போர் அணிவகுத்து நிற்கும் வீதி என்ற பொருளில் வருவதால் அக்காலங்களில் மூக்கனிகளை அணிந்தோர் இருந்துள்ளனர் என்பது பெறப்படுகின்றது.

(மூன்றாவது தலைமுறைக்கு வந்து சேர்ந்திருக்கின்ற  இந்த புகைப்படத்தில் உள்ள அணிகலனை புகைப்படம் எடுக்க மகிழ்ச்சியோடு அனுமதி தந்த  சகோதரி. திருமதி. சாந்திக்கு நன்றி. புகைப்படம்: யசோதா. 04.11.2012)

(சிறு குறிப்பு:
2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி  அக்ஷ்யபாத்திரத்தில் Draft இருந்த இக்கட்டுரை இன்று இங்கு பிரசுரமாகிறது.)

பொன் நகைகள் - பதக்கம் சங்கிலி - 17 -

நீண்ட தடிப்பான தனித்தங்கத்தினால் அல்லது முத்து இடையில் இளைக்கப்பட்ட நீண்ட சரத்தில் பட்டை தீட்டப் பட்ட அழகிய இரத்தினக் கற்கள், முத்துகள்  பதித்த அல்லது தனித்தங்கத்தில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பெரிய பதக்கத்தையும் கொண்டிருப்பது பதக்கம் சங்கிலியாகும்.

பெண்களின் கழுத்தணிகளில் ஒன்றான இது அன்னம், தாமரைப்பூ, மயில் போன்ற வடிவங்களில் இளைக்கப்பட்டிருக்கும். இவை மாத்திரமன்றி நகைக் கலைஞர் தன் கற்பனைக்கும் அழகுணர்வுக்கும் ஏற்ற வகையில் பதக்கங்களை உருவாக்குவதுண்டு.

பெண்ணுக்கான முக்கியமான கொண்டாட்டங்களின் போது குறிப்பாக பருவமெய்திய பெண்ணை அலங்கரிக்கும் போது அன்றேல் மணமகள் அலங்காரங்களின் போது பெண்ணை மேலும் அழகு படுத்த இப்பதக்கம் அணிவிக்கப்படுவது வழமை. நடன நிகழ்வுகளின் போது நடன மாதரும் இவ்வகையான கழுத்தணியை அணிந்திருப்பர்.

பலரின் பார்வைகள் குவியும் இடத்தில் இருக்கும் பெண்ணின் தாயார் அல்லது மாமியார் போன்ற நெருங்கிய உறவுக்காரப் பெண்களும் இவ்வாறான பதக்கம் சங்கிலிகளை கொண்டாட்டங்களின் போது அணிந்து கொள்வது வழமை. அது அவர்களை அந் நிகழ்ச்சியின் முக்கியமானவர்களாகக் காட்டும் அதே வேளை அவர்களின் அந்தஸ்தையும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு குறியீடாகும்.

மணப்பெண்ணின் சீதன சீர்வரிசைகளிலும் இப் பதக்கத்தோடு கூடிய சங்கிலி இடம் பெறுவதுண்டு. யாழ்ப்பாணத்து பாரம்பரியத்தில் பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பட்டியலை பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் தன் காதலியாற்றுப் படையில் பின்வருமாறு தந்திருப்பது நோக்கத்தக்கது.

” ................ தாலியும்
அட்டியல்,பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி
பூரானட்டியல், கீச்சுக்கல் அட்டியல்
கடுகுமணிக் கொலுசு, கவுத்தோர் காதுப்பூ
வாளி, சிமிக்கி, வளையல், தோடு
பட்டிணக்காப்பு, பீலிக்காப்பும்
பாதசரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கன் நட்டுவக்காலி
அரும்புமணி முருகு கொன்றைப்பூவும்
ஒட்டியாணம் ஒளிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமூடி சலங்கை
............”

எனத்தொடரும் அப்பாடலில் பதக்கம் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
மேற்கோள்: ’யாழ்ப்பாணப் பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும்’, பேராசிரியர். எஸ்.சிவலிங்கராஜா, குமரன் புத்தக இல்லம், 2014.  ’ஆடை அணிகலன்கள்’, பக். 33.

உயர் ரக இரத்தினக் கற்கள் பதித்தும் சிறந்த தங்கத்திலும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடி அமையும் இவ்வகை பதக்கம் சங்கிலிகள் பரம்பரை பரம்பரையாக அடுத்த சந்ததிக்குப் பக்குவமாகக் கை மாறி வந்தன.









படத்தில் காட்டப்பட்டிருக்கும் பதக்கம் சங்கிலி மூன்றாவது சந்ததிக்குக் கைமாறி இருக்கும் நகைக் கலைஞர் ஒருவர் தன்  கைகளினால்  வைரக்கற்களும் ஜாதி முத்துக்களும் கொண்டு கவனமுடன் இளைக்கப்பட்ட  பதக்கம் சங்கிலியாகும்.


தற்காலங்களில் தங்கத்தின் விலை உயர்வு, பாதுகாப்புக் காரணங்கள், செய் தொழிலாளர்கள் குறைந்து போனமை அல்லது பற்றாக்குறையாக இருப்பது,மற்றும் குறைந்த நேரத்தில் நிறைந்த பயனை பெறத்தக்க நகைகளைச் செய்வதற்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டமை, குறைந்த விலைக்கு மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலிவான உலோகங்களாலும் போலிக் கற்களாலும் ஆன நகைகள் அனைவராலும் வாங்கக் கூடிய விலைக்கு கிட்டுவது என்பவற்றோடு நாகரிக மாற்றங்களும் இவற்றின் செல்வாக்கை சற்றே குறைக்கப் பண்ணி இருந்தாலும் முக்கியமான நிகழ்வுகளின் போது அது இன்றும் தனக்குரிய இடத்தைப் பெற்றே இருக்கிறது.குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கொண்டாட்டங்கள், சுபதினங்களின் போது வளர்ந்த பெண்கள், திருமணமான பெண்கள் இதனை விரும்பி அணிவதைக் காணலாம்

(புகைப்படம் எடுப்பதற்காக இந் நகையைத் தந்துதவிய திருமதி.சாந்திக்கு நன்றி. படப்பிடிப்பு: யசோதா. 04.11.2012)

பிற் குறிப்பு:

தமிழர்கள் அணிந்த பொன் நகைகளுள் ’புலிப்பல் பதக்கம்’ பற்றிய பதிவொன்று என் தாய் வலைப்பதிவான அக்ஷ்ய பாத்திரத்தில் கீழ் வரும் இணைப்பில் 7.4.2016 அன்று பதிவிடப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் கீழ் வரும் இணைப்பில் சென்று காணலாம்.
புலிப்பல் பதக்கம்

http://akshayapaathram.blogspot.com.au/2016/04/3.html

’கடுக்கண் என்ற நகை பற்றி அறிய கீழ் வரும் இணைப்பிற்குச் செல்க...

கடுக்கண்

http://akshayapaathram.blogspot.com.au/2016/06/6.html


(சிறு குறிப்பு:
2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி  அக்ஷ்யபாத்திரத்தில் Draft இருந்த இக்கட்டுரை இன்று இங்கு பிரசுரமாகிறது.)



Wednesday 27 December 2017

கோயில்கள் - ஒரு குறுக்கு வெட்டுமுகம் - 16 -



யாழ்ப்பாணத்துப் பண்பாட்டை சைவத்தமிழ் பண்பாடென்றும் கந்த புராணக் கலாசாரம் என்றும் கற்றறிந்தோர் வர்ணிக்கும் மரபொன்று உண்டு.

அந்த அளவுக்கு கோயில்கள் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. ஒவ்வொரு கிராமங்களும் சிற்றூர்களும் தத்தமக்கென கோயில்கள் / குலதெய்வங்களைக் கொண்டிருப்பதையும்; சாதிப் பாகுபாடு காணப்படும் இடங்களில் அவரவர் குலங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப அவரவர் குலதெய்வங்களைப் போற்றி வழிபாடு செய்யும் மரபும் இன்று வரை நின்று நிலவுகிறது.

கோயில்களை வரலாற்றுப் புகழ் வாய்ந்த கோயில்கள், ஆகம முறைப்படி அமைந்த கோயில்கள், மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சிறு தெய்வ வழிபாட்டிடங்கள் என வசதி கருதிப் பிரித்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றையும் இங்கு காட்சிப்படுத்துவதும் விபரிப்பதும் நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதால் ஒரு குறுக்கு வெட்டு முகமாக ஒளிப்படங்களூடாக சிலவற்றைத் தொட்டுச் செல்வதே இதன் நோக்கமாகும்.

கூடவே இன்றய கால நிலவரப்படி நாட்டில் சுமூக நிலை வளமைக்குத் திரும்பியிருப்பதான தோற்றப்பாடுகள் காணப்படுவதால் அரசாங்கமும் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழரும் தத்தம் கிராமத்து கோயில்களை புனருத்தாரனம் செய்வதிலும் கும்பாபிஷேகங்களை நடாத்துவதிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அநேக கோயிலகள் கிராமங்கள் தோறும் கோபுரங்களோடு கம்பீரமாகக் காட்சி தருவதை இன்று மிகச் சாதாரணமாகக் காணலாம்.

ஆனால் வரலாறு ஆவணப்படுத்தப்பட வில்லை. அழிக்கப்பட்ட / போரினால் இடர் பட்ட கோயில்களின் ஒளிப்படங்களோ அன்றி வரலாற்றுப் பதிவுகளோ எங்கும் சேகரிக்கப்படவில்லை. நம்மிடையே இத்தகைய ஒரு வரலாற்றைச் சேகரிக்கும் மரபு இல்லை என்பது கவலைக்குரியது. இன்றும் அந்த விட்டேந்தித்தனமும் புறக்கணிப்பும் தொடர்கிறது என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. யாழ் நூலகம் அழிக்கப்பட்டதற்கான செய்திகளைத் தவிர வேறு எந்தத் ஆக்கபூர்வமான காட்சித் தடயங்களும் நம்மிடையே இல்லை. 

இதே நிலைமைதான் கோயில்களுக்கும்...

கூடவே யாழ்ப்பாணத்துக் கோயில்களும் நூலகமும் ஒரு சுற்றுலாத்தலமாக விரிவடைந்திருப்பதும் விசனத்துக்குரியதே!

அவசர அவசரமாகக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்பவர்கள் அதற்கு முன்னமிருந்த நிலைமையைச் சற்றே ஆவணப்படுத்துவீராக!

ஊற்றங்கரைப் பிள்ளையார் கோயில்; தண்ணீரூற்று


புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்

புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டிசுட்டான் தாந்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் தீர்த்தக் கேணி - வெளிப்புறத் தோற்றம்.

ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் தல விருட்சம்

அதன் நெருங்கிய தோற்றம்.

தல விருட்சம்; மிக நெருங்கிய தோற்றம்
இம் மரத்துக்குள்ளே பனைமரம் நடுவில் நிற்கும் அதிசயம் காண்க... இந்தத் தலவிருட்சம் எதுவெனத் தெரியவில்லை.

ஒளிப்படங்கள்:
ஊற்றங்கரை பிள்ளையார் கோயில்
வற்றாப்பளை அம்மன் கோயில்
ஒட்டிசுட்டான் தாந்தோன்றீஸ்வரர் கோயில்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 20.10.2017.


புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கீரிமலை நகுலேஸ்வரம்

நகுலேஸ்வர ஆலயக் குருக்கள்

குருக்களின் மகனார் தற்போதய ஆலய பூசகர்

கீழே வருவது மருதடி விநாயகர் ஆலய வெளித்தோற்றம்

மருதடிப் பிள்ளையார் ஆலயக் கதவு

ஆலயக் கதவு; இன்னொரு தோற்றம்

ஆலயக் கதவில் மரச் செதுக்கல் சிற்பம்; பிள்ளையார்

ஆலயக் கதவும் மரச் செதுக்கல் சிற்பம்



ஆலய கருங்கல் சிற்பங்கள்

ஆலய கருங்கல் சிற்பங்கள்

ஆலயக் கருங்கல் சிற்பம்

கருங்கல் கட்டுமானம்; தும்பிக்கை ஒடிந்திருத்தல் காண்க

சிற்ப வேலைப்பாடு

சிற்ப வேலைகள்


கருங்கல் சிற்பம்; மயிலின் தலை ஒடிந்திருத்தல் காண்க.
மறுபக்கக் கதவோரமும் அதே சாயலில்...

ஒளிப்படங்கள்: 
கீரிமலை நகுலேஸ்வரம், மருதடிப்பிள்ளையார்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 16.10.2017
அது நிற்க,

இன்றய இந்த பதிவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பள பளவென பலவித வண்ணங்களோடு மின்னும் கோயில்களைத் தவிர்த்து இன்னமும் புனருத்தாரணம் செய்யப்படாததும்; தனித்துவமாய் விளங்குவதுமான இரண்டு கோயில்களை ஒளிப்படங்களோடு இங்கு பதிவேற்றுகிறேன்.
1. தலையிட்டி வரைவர் கோயில்.
2. கூத்தியாவத்தை பிள்ளையார் கோயில்.

முன்னயது ஆகம முறைப்படி முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டது. அதற்கு மிக அருகிலே இருக்கும் கூத்தியாவத்தை பிள்ளையார் கோயில் வயல்களின் நடுவே விருட்சமாய் வியாபித்து இருக்கும் ஐந்து மரங்களின் சங்கமத்துக்குள் அமைந்திருக்கும் சிறு வழிபாட்டிடம்.

இவை இரண்டும் அமைந்திருக்கின்ற நிலப்பரப்பு 1989ம் ஆண்டிலிருந்து இராணுவத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் அமைந்திருந்ததால் எவராலும் சென்று பார்த்து பராமரிக்க முடியாத நிலைமை இருந்தது. அண்மைக்காலமாகத் தான் இந்த நிலப்பரப்பு பொது மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும்.

இவை இரண்டும் இன்னமும் மக்களின் சுற்றுலாத் தலமாக ‘விருத்தியடையாத’ / விருத்தியடைய விரும்பாத என் கிராமத்தின் அழகிய இரு வித கோயில்கள். இவை இரண்டும் மாவிட்ட புரம் ரயில் நிலையத்தில் இருந்தும் மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலின் கிழக்கு வாசல் வீதியிலிருந்தும்  நடந்து போகும் தூரத்தில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தலையிட்டி வைரவர் கோயில்; முகப்புத் தோற்றம்


தலையிட்டி வைரவர் கோயில் கோபுரம்

கருங்கல்லில் அலங்காரம்

கருங்கல்லில் அலங்காரம்

கருங்கல் அலங்காரம்; நெருங்கிய தோற்றம்

கோயிலின் உள்ளே... மூர்த்திகள்

மேல் விதானம்

விதானத்தில் செய்யப்பட்டிருக்கிற அலங்காரம்

இன்னொரு வகை அலங்காரம்

மற்றொரு வகை...

வேறொரு வகை...

சிவதாண்டவக் கோலம் சிற்பமாக...

பக்கக் கருங்கல் சுவரில்...

கருங்கல் பாளங்களால் அமைக்கப்பட்டிருக்கும் கோமுகி...

கருங்கல் இணைக்கப்பட்டிருக்கும் முறைமை...

கருங்கல் பாளங்களிலேயே செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள்....

தளம்; தளமும் கருங்கல் பாளங்களே!

சுவர் கரை; அதுவும் கருங்கல்

மேல் சுவர்

கருங்கள் சுவர்

வைரவர் வாகனம்; கருங்கல்....

நாய் வாகனம்; நெருங்கிய தோற்றம்

மூலஸ்தானத்தின் முன்னே....

சிற்ப அம்சம்...

கரையோரச் சிற்பங்கள்...

படிக்கட்டு; அதுவும் கருங்கல்லே.....

மூலஸ்தானத்து கரைச் சுவர்

சிங்கம் தாங்கி நிற்கும் மேல் விதானம்...

மேல் விதானம்....

தூண்...

இன்னொரு தூண்....

மேல் விதானமும் தூணும் இணையும் தோற்றம்...

பிரதான வாசலில் இருந்து உள்ளே மேல் நோக்கி....

பிரதான வாசலில் இருந்து உள்ளே நிலத்தில் இருந்து...

வெடிப்புகளின் மத்தியில் பரிவார தெய்வம்...

ஒற்றைக்கருங்கல் தூணில் அலங்காரம்

கருங்கல் பாளங்களால் மேல் விதானம்....

கோபுரம்....


சிந்துண்டு கிடக்கும் கோயில் கட்டிட கருங்கல் பாளங்கள்

இக்கோயில் நான் 90களின் மத்தியில் ஊருக்குப் போகையில் பார்த்த போது மிக அற்புதமான அழகோடு காட்சியளித்தது. ஆலயத்தின் மூலஸ்தான விக்கிரகத்துக்கு அபிஷேகத்துக்கான தண்ணீர் மேலே இருந்து shaver பூட்டப்பட்டு அதிலிருந்து பூ போல தண்ணீர் சிந்த அபிஷேகம் நடக்கக் கண்டிருக்கிறேன். மின்சார விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இக்கோயிலைக் காண நான் அங்கு செல்லும் நாட்களில் தவறுவதே இல்லை.

இன்று இக் கோயில் இரு நேரம் ஒரு பூசகர் வந்து விளக்கு வைப்பதோடு நின்று விடுகிறது.

நவீன பல வசதிகளை அக்காலத்திலேயே கொண்டிருந்த இக் கோயில் மாவிட்ட புரத்திலே அலுமீனிய தொழிற்சாலை நடாத்திக் கொண்டிருந்த பெரு வர்த்தகரான சம்பந்தர் என்பாரால் 60களின் இறுதியில் கட்டப்பட்டதென்றும்; வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலோடு கொண்ட முரண்பாட்டின் காரணமாக எழுந்தது இக்கோயில் என்றும் வன்னியில் இருந்து கருங்கல்லும் தென்னிந்தியாவில் இருந்து சிற்பாசாரியார்களையும் கொண்டு இக்கோயில் எழுப்பப் பட்டதென்றும் ஒரு செவி வழிக் கதை கூறுகிறது.

(மேலும் இக்கோயில் பற்றிய சரியான தகவல்கள் கிட்டும் போது அவை இங்கு பதிவேற்றப்படும்....)

மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலின் கிழக்கு வாசல் புறத்திலிருந்தும் மாவிட்ட புரம் ரயில் நிலையத்தில் இருந்தும் நடந்து செல்லத் தக்க இடத்தில் இயற்கை அரண் சூழ வயல்களின் நடுவே ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இன்னொரு கோயில் கூத்தியாவத்தைப் பிள்ளையார் கோயில்.

மேலே சொல்லப்பட்ட வைரவர் கோயில் மனித வலுவால் அமைக்கப்பட்டிருக்க அதற்கு மிக அருகே அமைந்திருக்கிற இந்தக் கோயில் இயற்கையாய் அமைந்த குளம், சூழ வயல் நிலங்கள் மற்றும் சில் என்று வீசும் காற்றோடு ஒரு அடியில் ஐந்து வகையான மரங்கள் ஒன்று சேர அமைந்த சூழலில் அமர்ந்திருக்கிறார் இந்த கூத்தியாவத்தைப் பிள்ளையார். வயல்காரரின் இஸ்ட தெய்வமான இவர் வயல் நெல்லின் முதல் அறுவடையின் போது பொங்கலும் மோதகம் கொழுக்கட்டையும் சாப்பிடும் விவசாயிகளின் செல்லப் பிள்ளையும் ஆவார். பிள்ளைகள் ஊஞ்சலாடி மகிழ மரம் வளைந்து தன் கிளையை பரப்பி இருப்பதும்; இயற்கையாய் அமைந்திருக்கிற வேர் பொந்தினுள் பிள்ளையார் இருக்க வசதியாய் இடம் அமைந்திருப்பதும் இயற்கையாய் அமைந்த அனுகூலமே! 

சில் என்று வீசும் காற்று, சுற்றிவர வயல்சூழ் நிலங்கள், அருகிலே அமைந்திருக்கின்ற குளம் பெரு விருட்சமென வியாபித்து நிற்கும் பென்னாம்பெரிய அடி கொண்ட விருட்சம், ஆடி மகிழ அதன் கிளை என ஒவ்வொருவரும் இந்தப் பிள்ளையாருடன் ஒரு வித அன்னியோன்னிய உறவை கொண்டிருப்பது இக் கிராமத்துக்கே ஒரு வித சோபையைத் தரும் அழகு!

நமக்கும் இங்கே ஒரு வயல் நிலம் அமைந்திருக்கின்றமையால் இங்கு வருகின்ற போது இவரையும் நான் தரிசிக்காமல் செல்வதில்லை.

இன்று வயல் நிலங்கள் எல்லைகளை இழந்து விட்டன, பத்தைகள் சூழ்ந்து விட்டன. குளம் தூர்ந்து விட்டது, பொந்துக்குள் இருந்த பிள்ளையாரைக் காணோம். யாரோ அருகில் ஒரு சிறு மண்டபம் கட்டி ஒரு பிள்ளையாரை அங்கிருத்தி இருப்பதாகத் தெரிகிறது.....

சோபை இழந்த போதும் அவரை - அந்த இடத்தை - போய் பார்த்து வந்ததில் ஓர் அலாதி இன்பம்; ஆறுதல், ஆசுவாசம் எனக்கு....



புதிதாக கட்டப்பட்டிருக்கிற ஒரு சிறு மண்டபம்

வியாபித்து கிளைபரப்பி நிற்கிற விருட்சம்

விருட்சத்தின் அடி

தூர்ந்து விட்ட குளம்

அகன்ற் அதன் அடி காணீர்!

கமறாவுக்குள் அடக்க முடியாத அதன் அடி....

சிறுவர்கள் விளையாடவென கிளைபரப்பி நிற்கும் சினேகமான அதன் கிளை....

கிளை கிளர்ந்து மேலே... மேலே....

அடிப்பகுதி பின் புறம்.

அடிப்பகுதி இன்னொரு புறம்....

மரவேர்கள் பிணைந்துள்ள காட்சி....

அதன் இன்னொரு தோற்றம்

இவ்விரு கோயில்களினதும் சரியான வரலாற்றுத் தகவல்கள் கிட்டும் போது அவை இங்கு பதிவேற்றப்படும்....

ஒளிப்படங்கள்:
தலையிட்டி வைரவர் கோயில் மற்றும் கூத்தியாவத்தைப் பிள்ளையார் கோயில்: ஒளிப்படம்: யசோதா.பத்மநதன்.
திகதி: 16.10.2017.