Wednesday 6 December 2017

பந்திப்பாய் - 5 -

ஒரு பொருள் பற்றி பேசப்புறப்படும் போது அதனைப் பின்பற்றி பண்பாடு சார்ந்த பல பின் புலங்கள் புலப்படத் தொடங்கும். பந்திப்பாய் குறித்த இந்தக் குறிப்பினை எழுதப் புகும் போது மக்கள் தம் உணவுப்பழக்க வழக்கங்கள், விருந்தோம்பும் முறை, இலக்கியங்கள் குறித்து வைத்துள்ள உணவுப் பண்பாடு குறித்த செய்திகள்,... என இப்படி விரிந்து கொண்டே போகும்.

பந்திப்பாய் என்ற கட்டுக்குள் நின்று கொண்டாலும் கூட பாயின் பண்பும் மூலப்பொருள், செய்முறை, தொழில் குறித்த துறை, பயன் பாடு, மக்கள் தம் வாழ்வியலில் அதன் இடம் என இன்னொரு விதமாக நீளும்.

இவைகளைத் தவிர்த்து சிறு குறிப்பினைத் தருவதென்னவோ மனதுக்கு திருப்தியைத் தருவதில்லை. அதனால் எங்கிருந்து இதனை எடுத்துச் செல்வதென தெரியவில்லை. 

இந்தப் பாய்கள் இன்று புழக்கத்தில் இல்லை. அதனைச் செய்வாரும் இல்லை. உணவுப் பண்பாட்டின் ஓரங்கமாக விளங்கிய இவை சபையோர் நிலத்தில் சப்பாணி வெட்டி இருந்து உணவுண்ணுவதற்குப் பயன் படுத்தியது.

மக்களிடம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட பல மாற்றங்களே இன்று இவை புழக்கத்தில் இருந்து மறைந்து போனமைக்கு முக்கிய காரணம். முன்னொரு காலத்தில் கொண்டாட்ட காலங்கள் குறிப்பாக திருமண நாள்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போதும்; அந்தியேட்டி, திவசம் போன்ற நினைவு நாள்களின் போதும் சொந்த மனைகளில் அக்கம் பக்கத்தில் உள்ள அயலாரும் இரத்த சொந்தங்களுமாக முதல் நாள் இரவு மரக்கறிகள், பழ வர்க்கங்கள், தேங்காய், புளி போன்ற இதர பொருட்களும் மனிதர்களுமென வீடு களை கட்டி இருக்கும்.

 அவர்களுக்கான தேநீர், விருந்துபசாரங்களும் பாக்கு வெற்றிலை உபசரிப்புகளுமாக இன்னொரு நிகழ்வு நடந்த வண்ணமாக இருக்க, பலகார தயாரிப்புகள், பலகாரச் சூடுகளும் மரக்கறி வெட்டுதல், தேங்காய் துருவுதல், சமைத்தலுக்கான முன் ஏற்பாடுகளைச் செய்தல் என வீடு களை கட்டிப் போயிருக்கும். குழந்தைகள், சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடிய வண்ணமும் பெற்றோர் பாதுகாவலர் இடையிடையே அவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பவர்களாகவும் விளங்குவர்.

அக்கம் பக்கத்தாரும் உறவினர்களும் கதைகள் பேசி கலந்துரையாடிய படி வேலைகளைப் பகிர்ந்து செய்த படி இருப்பர்.வீட்டுச் சொந்தக் காரர் அக்கறையோடு நேரத்துக்கு அவருக்கான உபசாரங்களில் ஈடுபட மறக்க மாட்டார்கள்.

இவ்வாறாக சமைக்கப் படும் பண்டங்கள் விஷேஷ நாளின் நிகழ்வுகளின் பின்னால் விருந்தாளிகளுக்கு விருந்தளிப்பதற்கு தயாராக இருக்கும். 

அந்த விருந்தோம்பலின் ஒரு பிரதான பகுதி இந்தப் பந்திப் பாய். நிலத்தில் பந்திப் பாய் விரித்து; வாழை இலை போட்டு; முதலில் குழந்தைகள், பின்னர் ஆண்கள், அதன் பின் பெண்கள் என வரிசையாக அமரப் பண்ணி நான்கு கிண்ணங்கள், மற்றும் மூன்று கிண்ணங்கள் ஒட்டி இருக்கும் கறிக் கிண்ணங்களை; பெரிய பாத்திரங்களில் சோறு அப்பளம் என இவைகளை எடுத்து உபசரித்த படி பெண்கள் எல்லோருக்கும் உணவு பரிமாறுவார்கள்.  

உணவு பரிமாறுவதிலும் முறைகள் உண்டு. ‘ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே’ என வழங்கும் பழமொழி ஒரு காலத்தில் இந்தப் பந்திப்பாயில் நிலத்தில் இருந்து உணவு உண்ணும் செயல் எத்தனை பிரபலமாகப் புழக்கத்தில் இருந்ததென்பதற்கு அச்சொட்டான சாட்சி. 

இதன் பொருள் என்னவெனில் ஒரு வீட்டில் ஒரு விசேட நிகழ்வு நடைபெறும் போது அயலார் வந்து உதவும் மரபுக்கேற்ப விருந்துபசாரம் நடக்கும் போதும் அயல் வீட்டுப் பெண்மணி உணவு பரிமாறும் செயலில் ஈடு பட்டிருப்பார். அந்தப் பந்தியில்  அப் பெண்மணியின் கணவரும் அமர்ந்துணவு உண்ணும் போது அவரின் மனைவிக்கு தன் கணவரை உபசரிக்கும் அல்லது உணவு பரிமாறும் சந்தர்ப்பம் கிட்டுமல்லவா? அப்போது தாராளமாக, ‘இலவசமாக’  ‘உபசாரம்’ செய்யலாம் தானே! அதனால் தான் அந்தப் பழமொழி வழக்கில் வந்தது.

இப்போது பந்தி வைத்து உணவு பரிமாறும் வழக்கம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மருவி வருகிறது. சில வேளைகளில் கிராமப் புறங்களில் அல்லது சிறு கொண்டாட்டங்களின் போது சிற்றூர்களில் இவ்வாறு நிகழக் கூடும்.

இப்போது கதிரை மேசைகளில் சில்வர் மற்றும் பீங்கான் தட்டுகளில் ஏற்கனவே ஓடர் செய்து விலைக்குப் பெற்றுக் கொண்ட உணவுப் பதார்த்தங்களை பொதுவாக வைப்பதும்; விருந்தாளிகள்  தாமாகவே தமக்கான உணவுகளை தமக்கு பிடித்த அளவுகளில் தாமே தமக்குப் பரிமாறிக் கொள்ளும் வண்ணம்  அமைந்திருப்பதுமாக ஒரு வாழ்க்கைமுறையே மாறி இருக்கிறது.

இதன் காரணமாக அன்னியோன்யமாக இருந்த அயலார் உறவினர் அன்பு,உறவு, நட்பு, ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்கும் இயல்பு, உணர்வு பூர்வமாக ஒருவரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் உள்ளார்ந்தஅக்கறை கலந்த அன்பு... என இவைகளும் வேறொரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டன.

பந்திப் பாய்; 50 - 55 வருடங்கள் பழமையானது

பந்திப்பாய் நீளபாட்டுக்கு...

அதன் பக்கவாட்டுத் தோற்றம்

பந்திப்பாய் இன்னொரு தோற்றம்

பந்திப்பாய்; நெருங்கிய தோற்றம்

இந்தப் பந்திப் பாய்களும் ஏனைய பாய்களைப் போல அதே மூலப் பொருள்களினாலேயே ஆக்கப் பட்டவை. இதன் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில் இதுஅகலம் குறைந்தவையாகவும் நீளம் மிக நீண்டவையாகவும் காணப்படுவது தான்.

விருந்தாளிகள் நீளமாக ஒரு வரிசைக்கு அமர்ந்து உணவுண்ண பயன் படும் வண்ணம் அமைந்தது.

குளக்கரைகளில் விளையும் ஒருவித கோரை நாணல் புல்லினைப் பதப்படுத்தி சாயம் பூசி, பின்னப்படும் இப் பந்திப் பாய்கள் சுருட்டி வைக்கத் தக்கவையாகவும் ஓரங்கள்  சிலும்பாமல் துணியினால் மடித்துத் தைக்கப் பட்டவையாகவும் அழகியல் வேலைப்பாடுகள் கொண்டவையாகவும்  காணப்படும்.

மேலே படத்தில் காட்டப்பட்டிருக்கிற பந்திப் பாய் சுமார் 50, 55 வருடங்கள் பழமையானது. எனக்கு முதல் சந்ததியினர் தம் வீட்டு நிகழ்வுகளின் போது பயன் படுத்தியது. போர் காலங்களின் பின்னரும் பாதுகாப்பாக நம்மோடு இன்றும் நிலைத்திருப்பது....அண்மையில் தாயகம் சென்றிருந்த போது காணக்கிட்டியது.

          (படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். ( யாழ்ப்பாணம். 11.10.2017)

No comments:

Post a Comment