Tuesday 1 August 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 9 -

 சோமாலியா

ஆபிரிக்க நாட்டில் ஒன்று சோமாலியா.

ஆபிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் நாடான சோமாலியா ஆபிரிக்காக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. வடமேற்கே ஜிபூட்டி தென்மேற்கே கென்யா வடக்கே யேமன் அதனோடு இணைந்த ஏடன் வளைகுடாவோடு கிழக்கே இந்தியப் பெருங்கடலையும் மேற்கே எதியோப்பியாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 

1991இல் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களால் பாதிக்கு மேற்பாட சனத்தொகையினர் இடம்பெயர்ந்தும் இறந்தும் போயினர். பெருந்தொகையினரான சோமாலிய அகதிகள் விக்ரோரிய மானிலத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

சூடான் / வடக்கு சூடான்

மத்திய ஆபிரிக்கப் பிரதேசத்தில் இருக்கும் நாடு சூடான் ஆகும்.

இது ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய நாடாக விளங்கிய சூடான் 2011இல் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தென்சூடான் தனிநாடாகப் பிரிந்த பின்னர் பெரிய நாடென்ற பெருமையை சூடான் இழந்து விட்டது. இப்போது அல்ஜீரியா மற்றும் கொங்கோ நாடுகளுக்கு அடுத்ததான பெரிய நாடாக சூடான் விளங்குகிறது.

இதன் எல்லைகளாக வடக்கே எகிப்தும் வடகிழக்கில் செங்கடலும் கிழக்கில் எதித்திரியாவும் தெற்கில் தென் சூடானும் தென்மேற்கில் மத்திய ஆபிரிக்கக் குடியரசும் மேற்கில் சாட் நாடும் வடமேற்கே லிபியாவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. நைல் நதியை நாட்டின் நடுப்பகுதியில் கொண்டமைந்த சூடானின் கிழக்கையும் மேற்கையும் இந் நதி ஊடறுத்துச் செல்கிறது.

2001க்குப் பின்னர் ஏற்பட்ட நாட்டின் அரசியல் குழப்பநிலைகளாலும் உள்நாட்டுப் போர்களினாலும் இந் நாடு பலவருடங்களாக நலிந்து போயிருந்தது. பெரும்பாலான தென் சூடானிய அகதிகள் விக்ரோரிய மாநிலத்தில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்னர் தம் நாட்டுக்கு அருகில் இருக்கும் அண்டைநாடுகளில் தஞ்சமடைந்து அங்கிருந்து ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான  UNHCR வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப் பட்டவர்களாவார்.

2011ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு சூடான் சூடானின் ஒரு பகுதியாக விளங்கியது. 2011இல் இடம்பெற்ற பிரிவினையின் போது எழுந்த உள்நாட்டுக் கலவரங்களால் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி சூடான் மக்கள் நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

இலங்கை:

இலங்கை இந்துசமுத்திரத்தில் தென்னிந்தியாவுக்குக் கீழே அமைந்திருக்கும் ஒரு சிறு தீவாகும். இந்தத்தீவின் இயற்கை அழகினால் இதனை இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் அதன் மக்கள் பண்பினால் அதனை ‘புன்னகைக்கும் மக்களின் தேசம்’ என்றும் அழைக்கிறார்கள். 

1983ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் ஏற்பாட இனப்பிரச்சினையின் காரணமாக சிறுபாண்மையினரான தமிழ் மொழி பேசுவோர் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளைத் தஞ்சமடைந்தார்கள்.

அவ்வாறு வந்தவர்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

வியற்நாம்:

தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கிற நாடு வியற்நாம்.

இந் நாட்டின் எல்லைகளாக வடக்கே சீனாவும் வடமேற்கே லாவோசும் தென்மேற்கே கம்போடியாவும் கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

1970ம் ஆண்டுக்குப் பிறகு வியற்நாமின் வடக்கு மற்ரும் தெற்கு வியற்நாம் சண்டயிட்டுக் கொண்டதைத் தொடர்ந்து 1975ல் வடக்கு வியற்நாமியப் பொதுவுடமைவாத அரசபடைகள் தெற்கு வியற்நாமியப் பகுதியை முற்றுகை இட்டு வெற்றி கொண்டதை அப்படயினர் தம்மைக் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தினால் தெற்கு வியற்நாமிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

1970களில் அவர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார்கள். அவுஸ்திரேலியாவில் அமுலில் இருந்த ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கை முடிவுக்கு வந்த பின்னர் பெரிய அளவில் இடம்பெற்ற வெள்ளையர் அல்லாத மக்களின் வரவாக இந்த வியற்நாமிய அகதிகளின் வரவு அவுஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பலர் வள்லத்தின் வழியாகவும் வேறு பலர் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியிருந்து அ.நா. சபையின் அகதிகள் அமைப்பில் தம்மைப் பதிவு செய்து அதன் வழியாகவும் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார்கள்.

( தொடரும்)


No comments:

Post a Comment