Monday 31 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 8 -

 லெபனான்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று லெபனான்.

இந் நாட்டின் வடக்கெல்லையாயும் கிழக்கெல்லையாயும் சிரியா நாடு இருக்கிறது.  தெற்கே இஸ்ரேல் நாடு  உள்ளது.

1975இல் நடந்த உள்நாட்டுப் போர்களால் மக்கள் தம் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.

அந்தவகையில் பல ஆயிரக்கனக்கான மக்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

கொசொவோ:

கிழக்கைரோப்பிய நாடுகளில் ஒன்று கொசொவோ. இந் நாடு சேர்பியாவிடமிருந்து சுதந்திரமடைவதற்காகப் போராடி வந்தது.  அதன் காரணமாகப் பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.17.பெப்பிரவரி 2008இல் சேர்பியாவிடமிருந்து தன்னைத் தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது. இது 2009லிருந்து அவர்கள் தாமாகத் தமக்கென ஒரு அரசாங்கத்தைத் தோற்றுவித்து இயங்கும் வரை ஐக்கியநாடுகள் சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.

1999இல் அவுஸ்திரேலிய அரசு சுமார் 4000 அகதிகளைத் தற்காலிகமாக மூன்றுமாத கடவுச் சீட்டு அனுமதி கொடுத்து ஏற்றுக் கொண்டது.அவர்கள் ஆகாயவிமானத்தின் வழியாக அழைத்துவரப்பட்டு ரஸ்மானிய மாநிலத்திலுள்ள பாவிக்கப்படாதிருந்த இராணுவ விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் நாடு சுமூகநிலைக்கு வந்ததும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீளக்குடியேறும் உதவித்தொகையோடு மீண்டும் தங்கள் தாயகத்திற்குத் திரும்பினார்கள்.

போலாந்து

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று போலாந்து.

இது மேற்கில் ஜேர்மனியையும் தெற்கில் செக் குடியரசு மற்றும் செலோவாக்கியா நாட்டையும் கிழக்கில் உக்ரைன், பெலரஸ் நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. அதன் வடக்குப் பகுதியை பால்டிக் கடலும் ரஷ்யாவும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ் இரு நாடுகளும் போலந்தைப் பங்கு போட்டுக் கொண்டன.( மோலோட்டோவ் - ரிப்பென்ச்ராப் ஒப்பந்தம்) கிட்டத்தட்ட 60 இலட்சம் ( 6 மில்லியன்) போலந்து மக்கள் இப்போரில் கொல்லப்பட்டார்கள்.

 இருந்த போதும் பெரும்பாலான தம் பண்பாடுப் பாரம்பரியச் சின்னங்களை அவர்கள் பாதுகாத்துக் கொண்டனர். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப் படும் உலகின் 14 பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்கள் போலந்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த ஓரம்சமாகும்.

 போரின் காரனமாகப் புலம் பெயர்ந்த மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள். அவர்களில் பலர் இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய சிப்பாய்களாவர்.

1980ம் ஆண்டுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போராட்டங்களால் நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழல்கள் காரணமாக பலமக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் பலர் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

( தொடரும்)

No comments:

Post a Comment