Friday 28 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 4 -

 1945ல் முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆயிரக் கணக்கான ஐரோப்பிய அகதிகள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார்கள். 1947 க்கும் 1954 க்கும் இடையில் சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ஐரோப்பிய அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி இருந்தார்கள்.

உலகத்தின் வரைபடத்தில் தொலைவாகவும் தனியாகவும் இருந்த இந்தத் தேசத்தை அவர்கள் தெரிவு செய்யக் காரணமாக இருந்தது 

1.சனத்தொகைக் குறைவும் தொழிலாளர் பற்றாக்குறையும் தமக்கு போதிய பொருளாதார வளத்தை நல்கும் என அவர்கள் நம்பியது.

2.மேற்கத்தைய தேசங்கள் சோவியத் யூனியனதும் சீனாவினதும் பொதுவுடமைக் கொள்கையிலும் அதன் வளர்ச்சியிலும் பயம் கொண்டிருந்தமையும் இந் நாட்டுக்கு வர விரும்புகிறவர்கள் பொதுவுடமைக் கொள்கைக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் என நம்பியதும்.

3. நாட்டின் சனத்தொகையைப் பெருக்குவதன் வழியாக தம்மை இஸ்திரப்படுத்திக் கொள்லலாம் என அவுஸ்திரேலியா நம்பியதும்

மேற்கத்தைய புகலிடக் கோரிக்கையாளர்களை அதிக அளவில் அவுஸ்திரேலியா உள்வாங்கக் காரணமாயிற்று.

1970ம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவுக்கு திட்டமிட்ட அகதிக் கொள்கைகள் என்று எதுவும் இருக்கவில்லை.

ஆஃப்கானிஸ்தான்: 

ஆஃப்கானிஸ்தான் தெற்கு ஆசியாவுக்கும் நடு ஆசியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இதன் கிழக்குத் தெற்குப் பக்கங்களைப் பாகிஸ்தான் எல்லையாகவும் மேற்கே ஈரான் எல்லையாகவும் வடக்கில் துருக்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தானும் வடகிழக்கை தசிகிஸ்தான் மற்றும் சீனாவும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.

’வெல்ல முடியாதது’ என்றும் ’பேரரசுகளின் கல்லறை’ என்றும் அழைக்கப்பட்ட இந் நாடு காலத்துக்குக் காலம் பல போர்களையும் ஆக்கிரமிப்புகளையும் கண்டது. ஆஃப்கானிஸ்தானில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு 1979ம் ஆண்டுக்குப் பிறகு அகதிகள் வரத் தொடங்கினார்கள்.

1979களில் சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானில் செல்வாக்குச் செலுத்தியதோடு அங்கு சுமார் 10 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. தன் படையினை சோவியத் யூனியன் விலக்கிக் கொண்ட பிறகு, அங்கு தலபான் என்ற பிரிவு ஆஃப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மக்களுக்குக் கடுமையான விதிகளையும் சட்டங்களையும் அமுல் படுத்த ஆரம்பித்தது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு நாட்டினைக் கைப்பற்றி சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

அதே வேளை அல்கைடா என்றொரு அமைப்பும் 1989ம் ஆண்டளவில் உருவாகியது. அதன் தலைவர் ஒசாமாபின்லாடன் என்பவராவார். இவரது நோக்கம் இஸ்லாமிய நாடுகள் மீதான வேற்று நாட்டவரின் செல்வாக்கை இல்லாதொழித்து, முகம்மது நபியின் காலத்தை ஒத்த, ஒரு தலைவருக்குக் கீழான, இஸ்லாமிய இராச்சியம் ஒன்றை உருவாக்குவதாகும்.

தன் அல்கைடா அமைப்பிற்கு ஆரம்பத்தில் பின்லாடன் தன் சொந்தப்பணத்தைச் செலவு செய்து வந்திருந்தாலும் பின்னர் பல இஸ்லாமிய நாடுகள் இவ் அமைப்புக்குப் பல நன்கொடைகளை வழங்கியுள்ளன. இது ஒரு தனித்தியங்கும் சிறு குழுவாக இயங்கி வந்தது.

 2001இல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பினை இஸ்லாமிய அல்கைடா தீவிரவாதிகள் நடத்திய பின்னர் ஆஃகானிஸ்தானில் இயங்கி வந்த அல்கைடா வலையமைப்பை உடைப்பதற்காக அமெரிக்கா ஆஃகானிஸ்தானின் மீது படையெடுப்பை நடத்தியது.ஆனால் அல்கைடா தீவிரவாதியான ஒசாமா பின்லாடனைப் தலவான்கள் பாதுகாத்து வந்தனர். இருந்த போதும் 1.5.2011 இல் ஒசாமா பின்லாடன் அமெரிக்கப் படையினால் கொல்லப் பட்டார். 

அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின்னரான இந் நிகழ்வுக்குப் பின்னர் அல்கைடா அமைப்பு  பலவீனம் அடைந்திருக்கிறது. தலபான்களின் தலையீடும் சற்றுக் குறைந்திருந்தாலும்  30.8.2021 அன்று அமெரிக்கா தன் படையை விலக்கிக் கொண்ட பிறகு மீண்டும் தலபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.. 

தலைநகர் காபூலில் அமெரிக்கப் படை 2021ல் வெளியேறிய போது மக்களும் வெளியேற துடித்த காட்சி

இவர்கள் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களை அமுல் படுத்தினார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வதும் கற்றலுக்காகப் பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வதும் தடை செய்யப்பட்டது.  இதனை எதிர்த்தவர்கள் கடுமையான தண்டனையைப் பெற்றார்கள். களவு எடுத்தவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. 

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலபான்கள்

இவற்றின் காரணமாக ஏற்பட்ட ஆஃப்கானிஸ்தானின் உள்நாட்டுக் குழப்பங்கள் போர்களினால் மக்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். நாட்டின் வரட்சி நிலை மற்றும் பொருளாதார மந்த நிலை, வறுமை போன்ற காரணிகள் மேலும் மக்களைத் தம் நாட்டில் இருந்து வெளியேற வைத்தது. 

அவ்வாறு வெளியேறியவர்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.


சில்லி:




சில்லி என்ற நாடு தென்னமெரிக்காவில் அமைந்திருக்கிறது. 

இதன் கிழக்கெல்லையாக  ஆஜெண்டீனாவைக் கொண்டிருக்கும் இந் நாட்டின் அமைவிடம் தெற்கு வடக்காக 4,630 கிலோ மீற்ரரையும் குறுக்காக 430 கிலோ மீற்றரையும் கொண்டு வடக்கே அட்டகாமா பாலைவனத்தையும் தெற்கே அண்டாட்டிக்காவையும் தொட்டபடி நிற்கும் தேசமாகும். 

‘உரிமையும் பலமும்’ என்பது இந் நாட்டின் தேசியக்  கோட்பாடாகும்.

1973க்குப் பிறகு அங்கிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அங்கு 1973ல் ஏற்பட்ட இராணுவ ஆட்சியினால் விளைந்த குழப்பங்களினாலும் உள்நாட்டின் அமைதி குலைந்து போன காரணங்களாலும் மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அந்த ஆரம்ப ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சில்லி நாட்டைச் சேர்ந்த குறிப்பாக அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களை  ஏற்றுக் கொண்டது.







சீனா:


சீன தேசம் கிழக்காசியப் பகுதியில் அமைந்திருக்கிறது.

பரப்பளவில் சீனா மிகப்பெரிய நாடாகும்.  இதன்  வடக்கில் மங்கோலியாவும் கிழக்கில் வட கொரியாவும் வடமேற்கில் கசகஸ்தான்,கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானும் மேற்கிலும் தென்மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா,நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளையும் தெற்கில் மியன்மார், லாவோஸ்,வியற்நாம் நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் 1949 மற்றும் 1989ம் ஆண்டுகளுக்குப் பின்னரும் புகலிடக் கோரிக்கையாளர்களாக சீனர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். 

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பொதுவுடமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேசியவாதிகள் பலர் தாய்வானுக்குத் தப்பி ஓடினார்கள். மேசேதுங் ஆட்சிக்கு வந்தார். இவர்களுக்கிடையிலான ( சீன தாய்வான்; தேசியவாதிகள் பொதுவுடமைவாதிகள் ) அரசியல் பிணக்குகள் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன.

பெரும் நிலப்பரப்பும், மக்கள்சனத்தொகை கூடியதும், அணு ஆயுதத்தைக் கொண்டிருப்பதும், வல்லரசாக வளர்ந்து வருவதுமான பொதுவுடமை நாடான மக்கள் சீனக் குடியரசு கடின உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் உதாரணமாக விளங்குகிறது. புராதன நாகரிக வரலாறைக் கொண்டிருக்கும் சீனா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. சீனாவின் கடற்கரைப் பகுதிகளை யப்பான் கைப்பற்றித் தன் ஆழுகைக்குக் கீழ் வைத்திருந்தது.

 அக்காலங்களில்  அவுஸ்திரேலியாவுக்குள் வந்திருந்த சீன மக்களும் கப்பலோட்டிகளாக இருந்த பெரு வணிகர்களான சீன மக்களும் தம் சொந்த நாட்டுக்குள் போகாமல் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி இருந்தார்கள்.

அப்போது ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கை அமுலில் இருந்த போதும்;  இனக் கொள்கை கடைப்பிடிக்கப் பட்டிருந்த போதும்; சீன அகதிகள் தற்காலிகமாகத் இங்கு தங்கியிருக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிற்பாடு 1945 களில் பெரும்பாலான சீன அகதிகள் தம் தாய்நாட்டுக்குத் திரும்பினர். குடும்பத்தைப் புதிதாக ஆரம்பித்த சிலரும் வெற்றிகரமாகத் தம் வர்த்தக வியாபாரத் துறைகளில் பிரகாசித்த   சிலரும் இங்கிருக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

1959ல் சீனா தன்னைச் சீனக் குடியரசாகப் பிரகடனப் படுத்திய பிறகு பொதுவுடமை இயக்கக் கொள்கையை ஆதரிக்காத  மக்கள் தாய்வானுக்குத் தப்பியோடியதைப் போல தம் பாதுகாப்புக் கருதி அவுஸ்திரேலியாவிலும் தஞ்சமடையத் தொடங்கினர்.

மேலும், 1989ல் சீன அரசாங்கம் இராணுவத் தாங்கிகளாலும் இராணுவத்தாலும் ’சொர்க்கத்தின் வாயில்’ என்று பொருள் கொண்ட தியனமென் சதுக்கத்தில் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி சொந்த மக்களை; பல்கலைக்கழக மாணவர்களைக் கொன்று குவித்த சம்பவத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கற்றுக் கொண்டிருந்த சீன மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்கி அவுஸ்திரேலியா தன் நாட்டுக்குரியவர்களாக அவர்களை ஆக்கியது.

 Bob Hawke

அக் காலத்தில் அவுஸ்திரேலிய நாட்டைப் பிரதமராகத்  தலைமைப் பொறுப்பேற்று நடாத்திக்கொண்டிருந்தவர் ‘மக்களின் பிரதமர்’ என வர்ணிக்கப்படும் Bob Hawke ஆவார். அவர் 1984, 1987 மற்றும் 1990ம் என மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தொழில்கட்சிப் பிரதமராக விளங்கினார். 

தியனமென் சதுக்கத்தில் நடந்த இச் சம்பவத்துக்குப் பிறகு பிரதமர்  Bob hawke பாராளுமன்றத்தில் பேசிய உணர்ச்சி மிக்க பேச்சினை கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் வழியாகக் காணலாம். இச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சீன மாணவர்கள் அத்தனை பேருக்கும் அவர் நிரந்தர வதிவிட உரிமையைக் கொடுத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் அம் மாணவர்கள் தம் குடும்பத்தவர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்துக் கொண்டார்கள்.

பிரதமர் Bob Hawke இன் உரை

1989. 4.15 அன்று தியனமென் சதுக்கத்தில்  நடந்த தன் சொந்த மக்கள் மீதான இராணுவத் தாக்குதலில் உயிரிழந்த சொந்த மக்களின் தொகை 200 - 300 என சீனாவும் நியூயோர்க் டைம்ஸ் 300 - 800 என்றும் கூறுகிறது. ஆனால் சீன மாணவ அமைப்புகள் இத் தொகை 2000 - 3000 வரை என்று கூறுகிறது. இன்றும் அதிர்ச்சியோடு நினைவு கூரத் தக்க இந்தப் போராட்டம் உலகத்தையே ஒரு தடவை உலுக்கிப் போட்ட நிகழ்வாகும். 

அரசாங்கத்தின் பாரிய இராணுவ படையை தனி ஒருவராக எதிர்த்து நின்ற கல்லூரி மாணவன்

( தொடரும் )

No comments:

Post a Comment