Friday 28 July 2023

வள்ளத்து அகதிகளும் ரெம்பா சம்பவமும் - 2 - ( Boat People & Tampa Incident )

 வள்ளத்தில் வந்த அகதிகள் ( Boat People) 

துணிகரமான கடலோடிகளாகவும்; குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும்; அதிகளவு பணத்தைப் பெற்று, மக்களைச் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஏற்றி வந்து, வேறு நாடுகளில் இறக்குகிற கடத்தல்காரர்களாகவும் சித்தரிக்கப்படுபவர்கள் People Smugglers என்று அழைக்கப்படும் கடலோடிகள்.

அவர்களுக்கு அதிகளவு பணத்தைக் கொடுத்து, உயிரைத் துச்சமாக மதித்து, கடல் பயணத்தின் வழியில் கடல் கொள்ளக்காரர்களிடமிருந்து தப்பி, அதீத காலநிலைகளின் மாறுபாடுகளினாலும் கப்பல்கள் உடைவதனாலும் திசைமாறி போய் விடுவதனாலும் ஏற்படும் இன்னல்களை எதிர் கொண்டு; எதிர்பார்த்த காலங்களுக்கு அதிகமாக கடலிலேயே தங்கி விட நேர்ந்து விடுவதால் ஏற்படும் தண்ணீர் உணவுப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஏற்படும் உடல் உபாதைகளை வெற்றி கொண்டு; பலவித இன்னல்களுக்கு மத்தியில் உயிர் பிழைத்து,  நாட்டின் எல்லைக் காவல் படையின் கண்களுக்குள் மண்ணைத் தூவி, ஒரு நாட்டின் கரை ஏறுபவர்கள் இந்த வள்ளத்தில் வரும் புகலிடக் கோரிக்கையாளர் .

இந்தத் துணிகரப் பயணத்தில் உடைந்த வள்ளங்களும் இழக்கப்பட்ட உயிர்களும் ஏராளம். 

இத்தனை தடைகளையும் தாண்டி உள்ளே வரும் மக்கள் முதலில் Detention Centres என்று அழைக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்தத் தடுப்பு முகாம் சட்டத்துக்குப் புறம்பாக இந் நாட்டுக்குள் வந்தவர்களையும், உரிய பயண அனுமதி ஆவணங்கள் இல்லாதவர்களையும், அவ் அனுமதி  மறுக்கப் பட்டவர்களையும் தடுத்து வைத்திருக்கும் இடமாகும். இங்கு முதலில் அவர்கள் தங்க வைக்கப் படுகிறார்கள். 

இவ்வாறு வந்த மக்களின் வரவு அவுஸ்திரேலியாவினால் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்துக் கொண்டு போனதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு  வடமேற்கே  இந்துசமுத்திரத்தில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவு என்று அழைக்கப்படும்  தீவில் பிறகு அவர்கள்  தங்க வைக்கப்பட்டார்கள்.  


பின்னர்,   அவுஸ்திரேலியா தன் நாட்டுக்கு அருகில் இருக்கும் இரு தீவுகளான Nauru and Manus நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளின் அரசாங்கங்களோடு ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. அதன் படி அத் தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் முறையற்ற வகையில் நாட்டுக்குள் உள் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப் படுகிறார்கள். 


ரெம்பா சம்பவம் ( Tampa Incident) 

இந்த ரெம்பா சம்பவம் உலக நாடுகளை அவுஸ்திரேலியாவை நோக்கித் திரும்பி ஒரு தடவை பார்க்க வைத்த ஓர் நிகழ்வாகும்.

24.8.2001ம் ஆண்டு நோர்வே நாட்டுக்குச் சொந்தமான ரெம்பா என்ற சரக்குக் கப்பல் அவுஸ்திரேலியக் கடற்பரப்பின் வழியாக வந்து கொண்டிருந்த போது, ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹசாரா (Hazara) என்ற சிறுபாண்மையினப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேஷியாவில் இருந்து வந்த வள்ளம் ஒன்று கடலில் மூழ்கி, மக்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து 433 மக்களைக் காப்பாற்றி, அவர்களை அவுஸ்திரேலியக் கரையில் கொண்டுவந்து இறக்க முற்பட்டது. 

ரெம்பா கப்பல்

ஆனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. பின்னர் நோர்வீஜிய அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் தலையிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பிரகாரம் அவர்கள் நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு முகாமில் இறக்க இணக்கம் காணப்பட்டது. 

இந்தச் சம்பவம் பல்வேறு நாடுகளின் பார்வையை அவுஸ்திரேலியா நோக்கி திருப்பிய ஓர் நிகழ்வாகும். 

கப்டன். Arne.Rinnan ( அர்ன்.ரைனன்)

Tampa's captain. Arne.Rinnan

மேற்கண்ட சம்பவம் நடைபெற்ற போது ரெம்பா கப்பலின் கப்ரனாக இருந்தவர் அர்ன்.ரைனன் என்பவராவார். 

நடந்தது என்ன?

கடல் சட்டதிட்டங்களின் பிரகாரம் மூழ்கிக்கொண்டிருந்த மரக்கலத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற S-O-S ( Save Our Ship ) அழைப்பை ஏற்று இந்து சமுத்திரத்தின் வடமேற்கு அவுஸ்திரேலியாவின் வழியாக வந்துகொண்டிருந்த அர்னின் ரெம்பா சரக்குக் கப்பல் 433 மக்களைக் காப்பாற்றியது.

இந் நிகழ்வு குறித்து அவர் வானொலிக்கு அளித்த நேர்முகத்தில் ‘ நாம் அவ்விடத்தை நெருங்கியபோது பலர் ஆபத்தான நிலையில் தத்தளித்த படி இருந்தார்கள். 10 - 12 பேர் வரையில் மயக்கமுற்றிருந்தனர். மேலும் பலர் சாவோடு போராடிக்கொண்டிருந்தனர்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்தவுடன் இந்தோனேஷியா அம் மக்கள் அனைவரையும் Merak யில் உள்ள ஜகார்த்தாவுக்குச் சொந்தமான Ferry port க்கு அவர்கள் அனைவரையும் அழைத்து வரும் படி அறிவுறுத்தியது.

ஆனால் 5 வரையான புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பல் தலைவரின் பகுதிக்குள் நுழைந்து, தம்மை அங்கு அழைத்துச் செல்லாதிருக்கும் படியும்; அவ்வாறு அழைத்துச் செல்லுமிடத்து தாம் கடலில் குதித்துத் தற்கொலை செய்யப் போவதாகவும் பயமுறுத்தியதையடுத்து, அவர் கப்பலை கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு செல்ல இணங்கினார். அதன் காரணமாகச் சர்வதேச கடற்பரப்பின் அருகில் இருக்கும் நாடான அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவில் இம்மக்களை இறக்க அர்ன் அவுஸ்திரேலியாவிடம் அனுமதியைக் கோரினார்.

 அப்போது பதவியில் இருந்த பிரதமர் ஜோர்ன். ஹவேர்ட் இடமிருந்து அதற்கு காட்டமான பதிலே கிடைத்தது.  இக்கப்பலின் தலைவரை அவர் கடத்தல்கார கும்பலில் ஒருவராகக் கணிப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டதோடு அவர்களில் யாரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால்வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்த இழுபறி நிலை தீர்வு எதுவும் எட்டப் படாது மூன்று நாட்கள் வரை நீடித்தது. மக்கள் பசியாலும் பிணியாலும் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வந்தனர்.  இறுதியில் பொறுமையிழந்த டெம்பா கப்பல் தலைவன் அர்ன் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து 29.8.2001 அன்று அனுமதி  இன்றி அவுஸ்திரேலியக் கடற்பரப்பினுள் பிரவேசித்தார். 

 அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 45 கடல்படையினர் கிறிஸ்மஸ் தீவில் இருந்து 7 கிலோமீற்றர்கள் தூரத்தில் கப்பலைத் தடுத்து நிறுத்தினர். இங்கு மேலும் 3 நாட்கள் கப்பல் நிறுத்தப்பட்டது. இறுதியாக 2.9.2001 அன்று ஏனைய நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. 'Pacific Solution' ஒன்று எட்டப்பட்டது.

இந்த விடயம் பற்றி அப்போது 45 SAS troops கடற்படையின் இரண்டாம் கொமாண்டராக இருந்த Peter.Tinley என்பார் கொடுத்த அறிக்கையில் ‘400க்கு மேற்பட்ட சாதாரண அகதிகள் மிகுந்த பசியோடும் உடனடி மருத்துவ தேவைகளோடும் காணப்பட்டார்கள். அவர்கள் என்ன நடக்கப் போகிறது என்ற பயத்தோடு இருந்தார்கள். மேலும், இக் கப்பலின் தலைவன் இந்த மனிதப் பொதிகளை  ( Human cargo) தரையில் இறக்கி, சர்வதேச சட்டதிட்டங்களின் பிரகாரம் தன் பணியை முடித்து விட்டுத், தன் பயணத்தைத் தொடரும் விருப்பத்தோடிருந்தார்.’ (The guardian) என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதன் பின் 'Pacific Solution' ஒப்பந்தத்தின் பிரகாரம் நியுசிலாந்து 130 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. ஏனையவர்கள் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள நவ்ரு தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு தடுப்பு முகாம்கள் அமைக்கப் பட்டு அவர்கள் அங்கு தங்கவைக்கப் பட்டார்கள்.

இந்தச் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு அவுஸ்திரேலியா பற்றிய பிம்பமும் பலத்த சேதத்திற்கு உள்ளானது.

இந்தக் கடுமையான சட்டதிட்டங்களினால் ஜோர்ன். ஹவேர்ட் மீண்டும் அவுஸ்திரேலிய மக்களால் வழமைக்கு மாறாக 3% அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமராகத் தெரிவு செய்யப் பட்டார்.

ரெம்பா கப்பல் தலைவன் அர்ன்.ரைனன்னுக்கு அவரது மனிதாபிமான செயற்பாட்டைக் கெளரவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபை 'Nansen Refugee Award' என்ற விருதினைக் கொடுத்து கெளரவித்தது. அவரை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் கதாநாயகனாகக் கொண்டாடிக் களித்தனர்!

ரெம்பா கப்பலில் புகலிடக் கோரிக்கையாளர்கள்

 பசுபிக் தீர்வு (Pacific Solution):

இந்தத் தீர்வின் பிரகாரம் Cartier Island, Christmas Island, Ashmore Island, Cocos Island ஆகியன அவுஸ்திரேலியத் தீவுகள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டன. அவைகள் பப்புவானியூகினியோடு சேர்க்கப் பட்டன. இதன் பொருள் என்னவென்றால் இனி இங்கு வந்திறங்கும் யாரும் அவுஸ்திரேலிய மண்ணுக்கு உரியவர்கள் அல்ல என்பதாகும். இந்த ஒப்பந்தம் பப்புவாநியூகினியோடு  செய்யப் பட்டது.  

இதன் படி இரு நாடுகளும் அவுஸ்திரேலியப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தம் நாட்டுக்குள் அனுமதித்தனர். இதற்காக அவுஸ்திரேலியா பெருந்தொகை ஒன்றைக் கைமாற்றியது.

இது ’பசுபிக் தீர்வு’ என்ற ஒப்பந்தமாக அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி பப்புவானியூகினிக்குச் சொந்தமான  நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளில் பல இலட்சக்கணக்கான டொலர்கள் செலவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப் பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அத் தீவுகளுக்கு மாற்றப் பட்டார்கள்.  

ஆனால் 'இந்த ஒப்பந்தம் அகதிகள் வரவைக் குறைக்கவில்லை; ஆனால், ஜோர்ன்.ஹர்வேர்ட் 2001இல் அமோக வெற்றியினை அடைய உதவியது' என்று  Australian Geographic history என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

மேலும், அது தன் புத்தகத்தை நிறைவு செய்யும் போது ‘இதில் சுவாரிஷமான உண்மை என்னவென்றால் இந்த அபிரோஜினல் மக்களின் தேசத்திற்கு வள்ளத்தில் வரும் வழக்கத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் பிரித்தானியாவிலிருந்து கப்பலேறி  கடல் வழியாக அவுஸ்திரேலியக் கரையை 1770ல் ( Botany Bay யில்)  வந்தடைந்த ஜேம்ஸ் குக் உம் அவர் வழி வந்தவர்களும் தான்’. என்று சொல்லி முடிக்கிறது.

Courtesy:  Australian Geographic History

( தொடரும்) 

No comments:

Post a Comment