Friday 28 July 2023

அவுஸ்திரேலியாவும் அகதிகளும் - 1 -

 அவுஸ்திரேலியா காலத்துக்குக் காலம் அகதிகளை நாட்டினுள்ளே அனுமதித்து வருகிறது. பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக விளங்கிய காலங்களில் இருந்து (1800கள் ) இற்றை வரை மக்கள் குடியேற்றம் இங்கு நடந்து வருகிறது. யார் இங்கு வரலாம் எவ்வளவு பேர் வரலாம் என்பதை அவ் அவ் குடியேற்ற நாடுகளின் அரசாங்கங்கள் தீர்மானித்து வந்தன.

ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு; ஐக்கியநாடுகள் சபை (UN) உருவாக்கப் பட்டதன் பிறகு; அதன் உட்பிரிவான (UNHCR) - United Nations High Commissioner for Refugees  -  ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் உருவான பிறகு, அவுஸ்திரேலியா அகதிகளை உள்வாங்க ஆரம்பித்தது.

அகதிகள் என்போர் யார் என்று ஐக்கியநாடுகள் சபை வரையறை செய்திருக்கிறது. 

அகதிகள் என்போர் யார்?

இன, மொழி, மத, காரணங்களாலும் அரசியல் அபிப்பிராயங்கள் காரணமாகவும் தான் பிறந்த நாட்டில் தம் உயிருக்கும் பாதுகாப்பான வாழ்வுக்கும் உத்தரவாதமில்லாமல் இருக்குமிடத்து  தம் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவோர் அகதிகளாவார். 

அவர் அகதியென நிரூபிக்கப்படுமிடத்து புகலிடம் கோரிய நாடு அவருக்கு 

* வேலை செய்வதற்கான உரிமை

* வீடு, கல்வி, மற்றும் நலச்சேவைகளைப் பெறுதலுக்கான உரிமை

* தான் சார்ந்த சமையக் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும்  கடைப்பிடிக்கும் உரிமை

* விரும்பியபடி அச்சமின்றி நடமாடும் உரிமை

* சட்டத்தின் வழியாக நீதியை கோரும் உரிமை

* தன் அடையாளத்தை வெளிப்படுத்தி பயணிக்கும் உரிமை

இவற்றை வழங்க வேண்டும் என்று 28.7.1951 அன்று கூட்டப்பட்ட மாநாட்டின் பிரகாரம் ஐ.நா. சபை வலியுறுத்துகிறது.

                       சில குழப்பங்களுக்கான விளக்கங்கள்:

புகலிடக் கோரிக்கையாளர் என்போர் யார்? ( Asylum seeker )

இவர் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டுப் பதிலுக்காகக் காத்திருப்பவர். 

இவருக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை பல உரிமைகள் குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நலச் சேவைகளுக்கான உரிமைகளை புகலிட நாடு மறுக்கலாம்.

இடம்பெயர்ந்தோர் என்போர் யார்?

இடம்பெயர்ந்தவர்கள் எனப்படுவோர் தன் சொந்த நாட்டிற்குள்ளேயே தன் வீட்டை விட்டுப்  பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தன் நாட்டுக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து இருப்போர்.

விசா என்றால் என்ன?

விசா என்பது ஒரு நாட்டுக்குள் ஒருவர் எவ்வளவு காலம் நிற்கலாம் என்பதைச் சொல்லும் அரச அனுமதி பெற்ற பயண ஆவணம் ஆகும்.

புதிய நாடு ஒன்றுக்கு வந்த எல்லோரும் அகதிகளா?

இல்லை. பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தன் நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்குக் குடியேற விரும்பலாம்; வரலாம்.

எவ்வளவு காலத்திற்கு ஒருவர் அகதியாகக் கருதப்படுவார்? 

தன் சொந்த நாடு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் கருதும் வரையும். அல்லது அவர் நிரந்தரமாக வந்த நாட்டில் வதிவிட உரிமை பெறும் வரையும்.

யார் அகதி எனக் கருதப்பட மாட்டார்கள்?

போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மற்றும் பல சட்ட விரோதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.

ஓர் அகதிக்கான பொறுப்புகள் என்ன?

குடியேறிய நாட்டின் சட்டங்களை மதித்து நடத்தலும் பொது நடைமுறைச் செயல்பாடுகளை மதித்து நடத்தலும்.

உலகம் முழுவதும் எவ்வளவு அகதிகள் இருக்கிறார்கள்?

1951 - 1.5 மில்லியன்

1980 - 8 மில்லியன்

2007 - 11 மில்லியன்

2008 - 15 மில்லியன்

2015 - 21 மில்லியன்

அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் படி 2013ம் ஆண்டு

அமெரிக்கா - 51,500 அகதிகளையும்

கனடா - 12,900 அகதிகளையும் 

அவுஸ்திரேலியா - 9,200 அகதிகளையும் உள்வாங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மனிதாபிமான உதவித்திட்டங்கள்:

நாட்டை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகிறது. 2011ம் ஆண்டு சிரியாவில் இருந்து இடம் பெயர்ந்து சிரியா நாட்டுக்குள்ளேயே வாழ்ந்து வரும் சிரிய நாட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. இதற்கடுத்ததாக அதிகளவு உதவிகளைப் பெற்றவர்கள் லெபனான் மற்றும் ஜோர்டான் நாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கும் சிரிய நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.  

அதே நேரம் அவர்களில் பலரைத் தன் நாட்டிலும் குடியமர்த்தியுள்ளது. ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு கடுமையான பாதுகாப்பு பரீட்சார்த்தங்களையும் உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளையும்  நடைமுறைகளையும் தன் குற்றமற்ற தன்மையையும் அவுஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கேற்ப திருப்திகரமாக நிரூபித்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களுக்கு சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

அதே நேரம்  தகுந்த ஆவணங்கள் இல்லாது வள்ளங்களின் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்களாக நாட்டினுள்ளே வந்தவர்களுக்கு இத்தகைய உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆனைக்குழுவும் அவுஸ்திரேலியாவும்:

அவுஸ்திரேலியா இந்த அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் ஆணைக்குழுவோடு இணைந்து, யார் இந்த நாட்டுக்குள்ளே வரலாம் என்பதைத் தீர்மானிக்கிறது. 

இந்த அகதிகளுக்கான ஆணைக்குழு 1950ம் ஆண்டில் இருந்து ( இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு) ஐரோப்பிய நாடுகளில் அகதிகளான இலட்சக்கணக்கான மக்களை மீள வேறு நாடுகளில் குடியேற்றியதில் இருந்து தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் சுமார் 10,000 க்கு மேற்பட்ட வேலையாட்கள் சுமார் 128 நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த அகதிகள் ஆணைக்குழுவோடும் செஞ்சிலுவைச் சங்கத்தோடும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயலாற்றி வருகிறது. 

அதே நேரம் 2011ம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் தன் மனிதாபிமான சேவைகளை மேலும் விஸ்தரித்து உதவிகளை வழங்க வேண்டும் என்பதற்காக சிறப்புக் குழு ஒன்றினையும் உருவாக்கியுள்ளது. ( Australian Civilian Corps) (ACC) என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று உதவ எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள்,.

வள்ளத்தில் வந்தோர்:

1970ம் ஆண்டு வட வியற்நாமின் பிடியில் தென் வியற்நாம் சிக்கிக் கொண்டதன் காரணமாக அதனை விரும்பாத பல ஆயிரக்கணக்கான தென் வியற்நாமிய மக்கள் சிறிய வள்ளங்களின் வழியாக அண்மையில் உள்ள பாதுகாப்பான நாடுகளுக்குச் சென்றார்கள். சுமார் 2000 வியற்நாமிய அகதிகள் வள்ளத்தின் வழியாக வந்து அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக புகலிடக்  கோரிக்கையை முன் வைத்தார்கள். 

1999 ம் ஆண்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் துணிகரமான ஆபத்தான கடல் வழிகளால் வள்ளங்களின் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்து அகதி அந்தஸ்துக் கோருகிறார்கள். அந்தப் பாதுகாப்பற்ற பயணங்களில் பல வள்ளங்கள் அதீத காலநிலைகளினாலும் போதிய பாதுகாப்பான கப்பல்களில்லாததனாலும்  அவை உடைந்தும்  மூழ்கடிக்கப்பட்டும் பல அவல இறப்புகளும் நேர்ந்துள்ளன.

இப்போது சட்டபூர்வமில்லாது வள்ளங்களின் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய நாட்டினுள்ளே வர அரசாங்கம் தடை விதித்துள்ளது.


( தொடரும்)

No comments:

Post a Comment