Sunday 30 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 7 -

 ஈரான்:

இது மத்தியகிழக்கு நாடுகளில் ஒன்று.

இதன் அமைவிடம் ஆசியாவின் மேற்கு, நடு தெற்கு ஆகிய பகுதிகலுடன் தொடர்பு கொண்டிருப்பதால் இந் நாட்டுக்கு புவியியல் சார்ந்த முக்கியத்துவம் உண்டு.

ஈரானின் வடக்கு எல்லையில் ஆர்மேனியா, அசர்பைஜான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் ஈரான் கரபியன் கடலோரமாக அமைந்திருப்பதால் கசகஸ்தான்,ரஷ்யா என்பன இதற்கு நேரடி அயல் நாடாகவும் விளங்குகின்றன. மேலும், ஈரானின் கிழக்கு எல்லையை ஆஃகானிஸ்தான், பாகிஸ்தான் என்பனவும் தெற்கே பாரசீகக் கடல், ஓமான் வளைகுடாவும் மேற்கில் ஈராக்கும் வடமேற்கில் துருக்கியும் ஈரான் நாட்டுக்கு எல்லைகளாக அமைந்துள்ளன.

இந் நாடு பண்டைக் காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. பேர்ஷியா என்றழைக்கப்பட்ட இந் நாட்டின் தலைநகரம் தெஃஈரான் ஆகும். தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் இந் நாட்டினுடய பொருள் பாரசீக மொழியில் ‘ஆரியரின் நிலம்’என்பதாகும்.

இங்கு பாரசீக, அஜர்பைஜான், கிலாக்கில்  மற்றும் குர்திஷ் இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

1980ம் ஆண்டில் இருந்து அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வர ஆரம்பித்தார்கள். வேறுபட்ட மதநம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் தொடர்ந்து அந் நாட்டில் வாழ்ந்து வருவதில் சிக்கல்கள் ஏற்பட்ட காரனத்தினால் அவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர வேண்டியதாயிற்று.

ஈரானில் புதிய அரசொன்று புரட்சி ஒன்றின் வழியாக 1979ம் ஆண்டு பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து, அவ்வரசு பஃஹாய் மத நம்பிக்கை கொண்டவர்கள் தம் மத அனுஷ்டானங்களைச் சுதந்திரமாக அனுசரிக்கத் தடை விதித்தது. பல ஈரானிய மக்கள் ஈரானின் இந்த இறுக்கமான மதநடைமுறைகளில் இருந்து தப்ப முயன்றார்கள்.

அதனால் அதே ஆண்டு (1979ம் ஆண்டு ) அவுஸ்திரேலிய அரசாங்கம் மனிதாபிமானத் திட்டம் ஒன்றைத் தீட்டி பஃஹாய் மத நம்பிக்கை கொண்டவர்களை அழைப்பித்து அவுஸ்திரேலியாவில் குடியேற்றியது.

ஈராக்

இது மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று.

வடமேற்கில் சகரோஸ் மலைத் தொடரையும் சிரியப் பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அரேபியப் பாலைவனத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. பக்தாத் இதன் தலைநகரமாகும். யூப்பிட்டீஸ், தைகிறீஸ் ஆகிய ஆறுகளுக்கிடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலப்பகுதி மொசப்பத்தேமியா என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் உலகின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நதிகளின் நீரோட்டத்தினால் செழிப்பான பிரதேசமாக இப்பகுதி காணப்படுகிறது.

வடக்கில் துருக்கியும் கிழக்கில் ஈரானும் தென்கிழக்கில் குவைத்தும் தெற்கில் சவுதி அரேபியாவும் மேற்கில் சிரியாவும் இந் நாட்டின் எல்லைகளாகும்.

1968 தொடக்கம் 2003ம் ஆண்டு வரை அங்கு அராபிய சோசலிசக் கட்சியின் ஒருகட்சி ஆட்சிமுறை நிலவியது. 2003ம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் ஈராக் மீது படையெடுப்பை நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு அக் கட்சியின் தலைவராக இருந்த சதாம்ஹுஷைன் நீக்கப்பட்டார்.  2011இல் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சிரிய உள்நாட்டுப் போர் இங்கும் பரவி உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்தபடி இருக்கிறது.

இங்கு வளைகுட போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாடுகளில் அங்கு அமைக்கப்பட்ட முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். 

அங்கிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான திட்டத்தின் வழியாக அவுஸ்திரேலியாவிலும் அம்மக்கள் வந்து குடியேறினார்கள். 


சிரியா

சிரியா மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாகும்.

தன் மேற்கு எல்லையாக லெபனானும் தென்மேற்கில் இஸ்ரேலும் ஜோர்டானும் வடக்கே துருக்கியையும் எல்ல நாடுகளாகக் கொண்டுள்லது. 

1963ம் ஆண்டிலிருந்து சிரியா பாத் கட்சியினால் ஆளப்பட்டு வருகிறது. 1970லிருந்து இக் கட்சி அசாத் குடும்பத்தவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. சிரியாவில் அந் நாட்டதிபர் அசாத்துக்கு எதிராக நடந்துவரும் உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். நாடு 97% அழிந்து போய் விட்டதாகப் புள்ளிவிபரக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. தற்போது சிரியா பல்வேறு பகுதிகளாகத் துண்டாட்டப்பட்டு பல்வேறு போட்டிக் குழுக்களினால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு சிரிய மக்களின் வருகை 2011இலிருந்து நடைபெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய மனித அவலம் நடந்த இடமாக சிரியா அறியப்படுகிறது. இலட்சக்கணக்கான சிரிய மக்கள் வீடற்றவர்கள் ஆக்கப் பட்டு அயல்நாடுகலில் உள்ள  ஐக்கியநாடுகள் சபையின் அகதி முகாம்களைத் தஞ்சமடைந்துள்ளார்கள். 

பல சிரிய அகதிகள் வள்ளத்தின் வழியாகவும் அவுஸ்திரேலியாவுக்குள் வர முனைந்தார்கள். பலர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். 

2015ம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசு பலருக்கு நிரந்தர வதிவிட உரிமையைக் கொடுத்து ஈராக், துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த சிரிய மக்களைத் தன் நாட்டுக்குள் அழைப்பித்தது.

அதே வேளை சிரிய நாட்டில் தங்கியிருக்கும் சிரிய நாட்டு மக்களுக்கும் பல மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது. அதுமட்டுமன்றி அயல் நாடுகளில் தங்கியிருக்கும் சிரிய மக்களுக்கும் தன் உதவிகளை அது விஸ்தரித்துள்ளது.

( தொடரும் )

No comments:

Post a Comment