Sunday 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டு பிரசுரங்கள் - 10 -

 அரச இணைப்பினைக் காண இங்கே அழுத்தவும்

மிகச் சமீபத்திய கோவிட்-19எதிர் நடவடிக்கைகளில் விக்டோரிய மாநிலம் தன்னந்தனியாக அல்ல: தலைமை மருத்துவ அதிகாரி

 

விக்டோரிய மாநிலத்தில் கோவிட்-19நோய்த்தொற்றின் திடீர் வெடிப்பு மற்றும் சமூகத்தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை ஆகியன குறித்து நாம் அனைவரும் கவலையுறுகிறோம்.

நமது நாட்டின் பதில் தலைமை மருத்துவ அதிகாரி’(Acting Chief Medical Officer) என்ற முறையிலும், மாநில மற்றும் எல்லைப்பகுதிகளதுதலைமை சுகாதார அதிகாரிகளைக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய சுகாதாரப் பாதுகாப்பு தலைமைக் குழு’(Australian Health Protection Principal Committee (AHPPC))-வின் தலைவர் என்ற முறையிலும் இந்த வைரஸ்-ஐத் துரத்தியடிக்க விக்டோரிய மாநில அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்குப் பொதுநல-அரசு ஆதரவாக இருக்கிறது என்பதை என்னால் ஐயத்திற்கிடமில்லாமல் கூற முடியும். நாங்கள் தினமும் சந்திப்புகளை மேற்கொண்டுவருகிறோம், மற்றும் விக்டோரிய மாநிலத்தின் செயற்பாடுகளை வலுவாக ஆதரிக்கிறோம்.

 

நோயறிவுச் சோதனை, தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்துதல்ஆகிய மூன்று நடவடிக்கைகளோடு உடல்ரீதி விலகல் மற்றும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கும்விக்டோரிய மாநிலத்தின் மும்முனை அணுகுமுறைதான் தேசிய அளவில் நாங்கள் மேற்கொண்டுவரும் அணுகுமுறையாகும். மற்றும், இந்த அணுகுமுறையானது பயனளிப்பதாக இருந்துவருகிறது என்பதை நாம் அறிவோம். மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஆஸ்திரேலியா மிகச் சிறப்பாகச் செயலாற்றியிருப்பதற்கு இதுவே காரணம். தேசிய அளவில், வலுவான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும், காலம் தாழ்த்தாமல் ஆரம்ப நிலையிலேயே செயல்படுவதுமே எமது அணுகுமுறையாக இருந்தது, மற்றும் தற்போதைய விக்டோரிய மாநில சூழ்நிலையில் நடந்துகொண்டிருப்பதும் இதுவேயாகும்.

 

இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்று நாம் நம்பிக்கையோடு இருந்திருந்தாலும், விக்டோரிய மாநிலத்தில் ஏற்பட்டிருப்பதைப் போன்ற திடீர்த் தொற்று வெடிப்புகள் எதிர்பார்க்கப்பட்டவையே. HIV/AIDS,காசநோய் மற்றும் சளிச்சுரம் ஆகியன உள்ளடங்க, பலவகைப்பட்ட தொற்று நோய்களில் 30 ஆண்டு கால உலகளாவிய அனுபவம் உள்ள பெருந்தொற்று நிபுணர் என்ற முறையில், நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது அதிவிரைவில் பரவும் தொற்றுநோய் ஒன்றாகும் என்பதை நான் அறிவேன். கோவிட்-19நோய்த்தொற்று மீண்டும் பரவ ஆரம்பிப்பதற்கு ஒரு சிறு கவனக்குறைவு போதுமானது, விரைவில் இது கட்டுக்கடங்காமல் போய்விடக்கூடும், ஆகவே நமது எதிர் நடவடிக்கைகளில் நாம் லாவகமாகவும், நெகிழ்வுத்தன்மையோடு இருந்தும் செயலாற்ற வேண்டியது அவசியமாகிறது. மற்றும் முழு அவதானத்துடன்,நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

 

ஆரம்பத்திலிருந்தே, இப்படிப்பட்ட திடீர்த் தொற்று வெடிப்புகள் அவ்வப்போது  ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நமது எதிர் நடவடிக்கைத் திட்டத்தில் இருந்துவருகிறது. ஆகவே, இப்படிப்பட நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அறிவோம். மெல்பர்ன் நகரில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பானமையானோர் எங்கு இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும், ஆகவே நமது முயற்சிகளை எங்கு குவிவாக மேற்கொள்ளவேண்டும் என்பதையும் நாம் அறிவோம். மிகவும் அசாதாரணமான நோயறிவுச் சோதனைச் செயல்முறை ஒன்று இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நோய்ப்பரவலை நிறுத்துவதற்காக, இந்தத் திடீர்த் தொற்றுவெடிப்பினைக் கூடிய விரைவில்அடைத்து மூடுவதே நமது நோக்கம். டாஸ்மேனிய மாநிலத்தவர்கள் அவர்களுடைய மாநிலத்தின் வட-மேற்குப் பகுதியில் வெற்றிகரமாகச் செய்திருப்பது இதுவேயாகும். மற்றும் விக்டோரிய மாநில அணியினரும் இப்போது இதைத்தான் செய்துவருகிறார்கள்.

 

டாஸ்மேனியாவின் வட-மேற்குப் பகுதிச் செயல்பாட்டு மாதிரியை ஒரு பெரு நகர்ப்பகுதிச் சூழலில் நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் உள்ளன, ஆனாலும், விக்டோரிய மாநிலத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தக்கதும், தகுந்த விகிதாச்சாரத்திலானதும் ஆகும். இந்த நடவடிக்கைகள் விஞ்ஞானத்தின் அடிப்படையிலானவை. இவைஉடனுக்குடன் கிடைக்கும் நிகழ்-நேரத் தகவல்களையும் சிறந்த பொது சுகாதார நடைமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டவை, மற்றும் இவை உயிர்களைப் பாதுகாத்துக் காப்பாற்றும்.

 

நேர்முகமானபல விடயங்களை நாம் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. இந்தப் பெருந்தொற்றுப் பரவல் காலத்தில், நான் ஏற்கனவே சுட்டிக் காண்பித்திருப்பதைப் போல, ஆஸ்திரேலியா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, மற்றும் அந்த வெற்றியில் விக்டோரிய மாநிலத்திற்குப் பங்கு இருக்கிறது. மருத்துவ வல்லுனர்களாலும், நமது பொதுநல-அரசின் நாடளாவிய அரசியல் தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகத் தெளிவான,வியூகத்தோடு கூடிய நோய்க்-கட்டுப்பாட்டுத் திட்ட-வரைவுகள் மற்றும் செயல்திறன், மற்றும் இத்தோடு கூடிய ஆஸ்திரேலிய சமூகத்தினரது ஈடுபாடு மற்றும் பற்றுறுதி ஆகியவற்றின் துணையோடு இந்த கொரோனா வைரஸ்பரவலின் உயர்ச்சியைக் காண்பிக்கும் வளைவுக்கோட்டினை நாம் நாடெங்கும் சமப்படுத்தியிருக்கிறோம். உலகெங்கும் காணப்படும் நோய்த்தொற்று வெடிப்புகளோடு ஒப்பிடும்போது, விக்டோரிய மாநிலத் தொற்று வெடிப்பு மிகச் சிறியதே. ஆனாலும், இந்தப் பரவலின் தொடர்ச்சியைத் தடுப்பதற்காக நாம் விரைவாய்ச் செயலாற்ற வேண்டும், மற்றும் நாம் விரைவாய்ச் செயல்பட்டிருக்கிறோம்.

 

கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலையில், பொறுமையைக் காக்குமாறு விக்டோரிய மாநில மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் அவர்களுடைய நலனை முன்னிட்டும், அவர்களது மாநிலத்தின் நலனை முன்னிட்டும், இந்த நாட்டின் நலனை முன்னிட்டும் பொறுமையைக் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்டுப்பாடுகளின் செயலூக்கப் பலன் என்பது பொது சுகாதாரத் துறையினரதுப் பரிந்துரைகளைச் சமூகத்தினர் பின்பற்றுவதைச் சார்ந்தே அமையும். நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கிறோம்.

 

இந்த மிகச் சமீப நோய்த்தொற்று வெடிப்பானது விக்டோரிய மாநிலத்தின் பிரச்சினை அல்ல. இது ஒரு நாட்டின் பிரச்சினை. இது ஒவ்வொருவரின் பிரச்சினை. பொதுநல-அரசினாலும், இதர மாநிலங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளாலும் ஆதரவுதவிகள் அளிக்கப்பட்டுவருகின்றன– நோயறிவுச் சோதனைகள், நோய்த்தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பொது சனங்களுடனான ஈடுபாடு ஆகியவற்றில் நூற்றுக் கணக்கான மருத்துவப் பணியாளர்களும் மற்ற பணியாளர்களும் உதவிவருகின்றனர். இந்த வைரஸ்-ஐ முறியடிப்பதற்கு தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால்  தைரியமூட்டப்பட்ட  உணர்வு எனக்கு அதியளவில் இருக்கிறது, மற்றும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதையும் நான் குறிப்பிடலாம். முக்கியமாக, பற்கலாசார சமூகத்தினருடன் நாம் ஏற்கனவே பல பணிகளில் இணைவாய்ச் செயல்பட்டிருக்கும் அதே வேளையில், பற்கலாசார சமூகத்தினர் அதியளவில் வாழும் மெல்பர்ன் நகரின் இந்தப் பகுதிகளுக்கு சரியான செய்திகளைக் கொண்டுசேர்ப்ப்பதை உறுதிப்படுத்துவதற்கான நமது முயற்சிகளை நாம் இரட்டிப்பாக்கிக்கொண்டிருக்கிறோம்.

 

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய சக ஆஸ்திரேலியர்களும் உங்களுடன் இருக்கிறார்கள் என்று நான் நம்பும் அதே வேளையில், நானும், துவக்கத்திலிருந்தே ஆஸ்திரேலியாவின் கோவிட்-19எதிர் நடவடிக்கைகளை வழி நடத்திவந்திருக்கும் இந்த நாட்டின் சுகாதார மற்றும் மருத்துவ வல்லுனர்களாகிய AHPPC-யில் உள்ள எனது சக பணியாளர்களும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை அனைத்து விக்டோரிய மாநில மக்களும் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் விழைகிறேன். இதில் நாமனைவரும் இணைவாய் இருக்கிறோம், மற்றும் நாமனைவரும் இதை  இணைவாய்க் கடப்போம். இது ஒரு தேசிய அளவிலான முயற்சி. இது எப்போதுமே ஒரு தேசிய அளவிலான முயற்சியாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த வைரஸ்-ஐ வீழ்த்துவது விக்டோரிய மக்களைப் பாதுகாக்கும், இது நம் அனைவரையும் பாதுகாக்கும்.

 

பேராசிரியர் பால் கெலி

பதில் தலைமை மருத்துவ அதிகாரி

 


No comments:

Post a Comment